சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான பாரீஸ் நகரத்தில், 120 நாடுகளும், 150 தலைவர்களும் பங்கேற்கும் சர்வதேச பருவநிலை மாநாடு கூடியிருக்கிறது. உண்மையிலேயே மிகவும் தீர்க்கமான சிந்தனையுடன், தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய புவிவெப்ப சராசரி அளவில் இரண்டு செல்ஸியஸ் மிகாதபடி பார்த்துக்கொள்ளும் முனைப்புடன் ஒவ்வொரு நாடும் பங்கேற்க வந்துள்ளன.
மேலை நாடுகளில் 1900-த்துக்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக அவை வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறின. அவர்களது வளர்ச்சியால் ஏற்பட்ட கரியமில வாயுதான் இன்றைய புவிவெப்பமடைவதற்குக் காரணம். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், புதிய தொழில்களைத் தொடங்குவதன் மூலம்தான் பல கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்க முடியும். அப்படி புதிய தொழில்களை தொடங்கினால், கரியமில வாயு வெளியேற்றமும் இருக்கத்தான் செய்யும்.
அதுமட்டுமல்ல, மேலை நாடுகளின் வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றத்தால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் புயல், மழை, சுனாமி, வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் மட்டுமல்ல, பல்லுயிர்ப் பெருக்கமும் மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், அனைத்து நாடுகளுக்கும் ஒரே சீரான கரியமில வாயுவின் குறைப்பு என்பது நியாயமல்ல.
இந்த மாநாட்டில் பங்குகொள்ளும் 120 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அதிக நாள்கள் சூரியஒளி பெறுபவை. ஆகவே, பசுமை இல்ல வாயுவின் அளவு குறைய வேண்டுமானால் சூரிய ஒளியை முழுமையாகப் பயன்படுத்தி, மின் தேவையை சமாளிப்பது மட்டுமே மிக எளிய வழி. அணு மின்சக்தி என்பது பேராபத்தை உள்ளடக்கியது என்பதாலும், அதிக முதலீடு தேவைப்படுவதாலும் எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து, மாசுபடாத ஆற்றல் உருவாக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான நிதியை 20 பில்லியன் டாலர் அளவில் இரட்டிப்பாக்கியுள்ளன. உலக அளவில் பசுமை இல்ல வாயுவின் பெருக்கத்துக்கு காரணமாக உள்ள தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தின் ஆய்வுகளில் பங்கேற்பு மற்றும் நிதி பங்களிப்பு இரண்டையும் அளிக்கவுள்ளன.
என்னதான் ஆய்வு செய்தாலும், பசுமை இல்ல வாயுவின் அளவை எவ்வளவு வேகமாகக் குறைத்தாலும் இயற்கை அதனை ஏற்றுத் தகவமைத்துக் கொள்வதற்குப் பல பதின்ஆண்டுகள்கூட ஆகலாம் என்கிறார்கள். இருப்பினும், இப்போதே தொடங்கினால் மட்டுமே புவிவெப்பத்தை கட்டுக்குள் வைக்க முடியும். இச் சவாலை எதிர்கொள்வதற்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை முதலாவது அனல் மின்சாரம், இரண்டாவது கால்நடை வளர்ப்பு. இவை இரண்டையும் விட்டுக்கொடுக்க இந்தியா போன்ற வளரும் நாடுகள் தயாராக இல்லை.
இன்றையச் சூழலில் அனல் மின்நிலையங்கள் மூலம்தான் உலகத்தின் 41% மின்சாரத் தேவையும், 29% எரிசக்தியும் பெறப்படுகின்றன என்பதுதான் உண்மை நிலைமை. பிலிப்பின்ஸ், இந்தியா போன்ற வளர்ச்சியடையும் நாடுகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட புதிய அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டவை. உலக மின் உற்பத்தியில் இந்தியாவின் பயன்பாடு 6% மட்டுமே என்பதைப் பார்க்கும்போது, இந்தியா மேலும் அனல் மின்நிலையங்களை அமைக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
இரண்டாவது, கால்நடை வளர்ப்பு. பசுமை இல்ல வாயு அளவில் 15% கால்நடை வளர்ப்பு மூலம் வெளியாகின்றது. இன்றைய உலகில் ஆடு, மாடுகள் அதிக அளவில் பண்ணைகளில் வளர்க்கப்படுவது மாமிசத்துக்காகத்தானே தவிர, வெறும் பாலுக்காக மட்டுமே அல்ல. உதாரணத்துக்கு, ஓர் அமெரிக்கர் சராசரியாக தினந்தோறும் 250 கிராம் மாமிசத்தைச் சாப்பிடுகிறார். எந்தெந்த நாடுகளில் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் உணவில் மாமிசத்தின் அளவும் அதிகரிக்கிறது. வளர்ச்சியடையந்த நாடுகளில்தான் மாமிசத் தேவை அதிகமாக இருக்கிறது.
பாரீஸ் மாநாட்டில் பங்குபெறும் 120 நாடுகளில் 21 நாடுகள் தங்களது அறிக்கையில், கால்நடை வளர்ப்பைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றனவே தவிர, மாமிசம் சாப்பிடும் அளவைக் குறைப்பது குறித்து யாரும் பேசவில்லை. இருப்பினும், மின் சிக்கனம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல, மாமிசம் தவிர்ப்பதால் உலக வெப்பம் குறையும் என விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று புவிவெப்ப குறைப்பு ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் மாநாடு தொடக்க நாளில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேசிய வார்த்தைகள் உலக நாடுகள் அனைத்துக்குமான கேள்வியை முன்வைத்துள்ளன - "2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகன் மாநாட்டில், புவிவெப்பத்தைக் குறைக்கும் சவால்களை நடைமுறைப்படுத்த, மானுட வழக்கத்தை திருத்திக்கொள்ள 100 மாதங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. அதில் 80 மாதங்கள் வீணாகக் கழிந்துவிட்டன. நாம் அந்த அளவுக்கு ஒட்டுமொத்த மந்தகதிக்கு மாறிவிட்டோமா?'
மின் சிக்கன விழிப்புணர்வு, மாமிசம் உண்ணும் அளவை குறைக்கும் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாமல், மானுட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல், வெறும் நிதி ஒதுக்கீடு, புதிய ஆய்வுகள் மட்டுமே புவிவெப்பத்தை கட்டுப்படுத்த முடியாது.
இந்த மாநாடும் பேசிக் கலைந்த மாநாடாக முடிந்துவிடக் கூடாது.