குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கருப்புப் பணத்திற்குக் கடிவாளம்!

கண்ணுக்குத் தெரியாமல் ஒரு மிகப்பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விடாமல் அதன் தோளில் ஏறி அமர்ந்து, பலனை எல்லாம் அட்டையாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் கருப்புப் பணப்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:51 am

ஆசிரியர்

கண்ணுக்குத் தெரியாமல் ஒரு மிகப்பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விடாமல் அதன் தோளில் ஏறி அமர்ந்து, பலனை எல்லாம் அட்டையாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் கருப்புப் பணப் பொருளாதாரத்திற்கும், அதன் முதுகெலும்பை உடைக்கும் முயற்சிக்கும் இடையே நடக்கும் அந்தப் போராட்டம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. கருப்புப் பணத்திற்கு எதிராக எந்தவொரு அரசு நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், அந்த ஆட்சியைக் கவிழ்க்க கருப்புப் பணப் பொருளாதாரம் இயன்றவரை முயற்சி செய்யும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
 அன்னிய நாட்டிலிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டு வரவோ, அது பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவோகூட, அந்த நிழல் சக்திகள் அனுமதிப்பதில்லை. இல்லையென்றால், வருமான வரிக் கணக்கில் எந்தெந்த நாடுகளுக்கு ஒருவர் பயணித்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்கிற நிபந்தனையை எதிர்ப்பானேன்?
 அன்னிய நாட்டிலுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருவது இருக்கட்டும், இந்தியாவுக்குள் இருக்கும் கருப்புப் பணத்தை முடக்கவும், கருப்புப் பணப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தவும், கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும் மத்திய அரசு முனைந்திருக்கிறது. அதன் முதல்படியாகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, தண்டனை கடுமையாக்கப்பட்டது. இப்போது, மின்னணுச் சேவையை (இ-டிரான்சாக்ஷன்ஸ்) ஊக்குவிக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது.
 கடந்த 2013-14 நிதியாண்டில் மட்டும் கணக்கில் காட்டப்படாத வருவாய் ரூ.90,390 கோடி என்றும், சோதனைகள் மூலம் கைப்பற்றிய கருப்புப் பணம் ரூ.10,791 கோடி என்றும் வருமான வரிப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த அளவுக்குக் கருப்புப் பணம் உருவாவதற்கு மூல காரணம், இந்தியாவில் வர்த்தகப் பரிமாற்றங்கள் பெரும்பாலும் நேரடிப் பணப் பரிமாற்றங்களாக மட்டுமே இருப்பதும், வங்கிப் பரிமாற்றம் குறைவாக இருப்பதும்தான்.
 நேரடி ரூபாய் பணப் பரிமாற்றத்தைச் சார்ந்த பொருளாதாரமாக இந்தியா இருப்பதால், அது எளிதாகக் கருப்புப் பணம் உருவாக வழிகோலுகிறது. இந்தியாவைப் போன்ற பிற நாடுகளான பிரேசில் (3.9%), மெக்சிகோ (5.3%), தென் ஆப்பிரிக்கா (3.7%) ஆகியவற்றைவிட நமது நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ரூபாய் பரிமாற்றத்தின் அளவு நான்கு மடங்கு (12%) அதிகம். ரூபாய் நோட்டு மூலம் பரிமாற்றம் எனும்போதே, கருப்புப் பணத்தைக் கண்டறிந்து தடுப்பது இயலாததாகிறது.
 பிரச்னை அதுமட்டுமல்ல, இந்தியாவின் மக்கள்தொகையில் வருமான வரி செலுத்துபவர்களின் விழுக்காடு வெறும் 3% மட்டுமே. தெருவுக்குத் தெரு நாம் பார்க்கும் பல திடீர் பணக்காரர்கள் வரி செலுத்துவதே இல்லை. அவர்கள் வரி வளையத்துக்குள் அகப்படுவதில்லை. கருப்புப் பணப் பரிமாற்றத்தினூடே மட்டுமே அவர்களது வியாபாரம் நடைபெறுகிறது.
 இப்படிப்பட்ட நிலையில், நேரடியான பணப் பரிமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி விழாத வரையில், கருப்புப் பணத்தின் குரல்வளையை நெரிப்பது என்பது இயலாத விஷயம். இதை உணர்ந்துதான், தென் கொரியா போன்ற வளர்ச்சி அடைந்த ஆசிய நாடுகள், மின்னணு சேவையை ஊக்குவித்துக் கருப்புப் பணம் உருவாவதைக் கணிசமாகத் தடுக்க முற்பட்டிருக்கின்றன. அவர்கள் வழியில், இந்தியாவும் அதிக அளவில் மின்னணு சேவை மூலம் வியாபாரப் பரிமாற்றங்கள் நடப்பதை ஊக்குவிப்பது என்கிற முயற்சியில் இறங்கி இருக்கிறது.
 வியாபாரப் பரிமாற்றங்களுக்கு பெரிய தொகையாக இருந்தாலும் வங்கி அட்டைகளையோ, காசோலைகளையோ, இணையதளப் பரிமாற்றத்தையோ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கி இருக்கிறது. குறிப்பாக, இடநிலப் பயன்மாற்றங்களில் (ரியல் எஸ்டேட்) பாதிக்குப் பாதி கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவது அல்லது நேரடிப் பணப்பரிமாற்றம் நடைபெறுவது தடுக்கப்பட்டாலே மிகப்பெரிய அளவில் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். ஏறத்தாழ, ரூ.128 லட்சம் கோடி அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி.) உள்ள இந்தியாவில், நேரடிப் பணப் பரிமாற்றம் தடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் ஆதாயங்கள் அளப்பரியவை.
 லட்சம் ரூபாய்க்கு மேலே உள்ள அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் இனிமேல் வங்கி அட்டை, காசோலை, இணையப் பரிமாற்றம் மூலம் மட்டுமே என்று ஏற்பட்டுவிட்டால், கருப்புப் பணம் உருவாவது கணிசமாகத் தடுக்கப்படும் என்பது மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் கருப்புப் பணத்தின் ஆதிக்கம் கணிசமாகக் குறையக்கூடும். கடுமையான கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய அணுகுமுறை கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணையும் அடைக்க மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி.
 இணைய வணிகம், இணையத்தின் மூலம் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்துதல் ஆகியவை அதிகரித்து வருகின்றன. செல்லிடப்பேசிகளின் பயன்பாடும், "ஜன்தன்' வங்கிக் கணக்குத் திட்டமும் மின்னணு சேவையை கிராமப்புற அளவிலும் விரைவுபடுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் அரசின் முனைப்புக்குக் காரணம்.
 பெட்ரோல் போடுவது, பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்துவது போன்றவற்றுக்கு இனி வங்கி அட்டைகளை மட்டுமே பயன்படுத்துவது, நேரடிப் பணப் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்று ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனும் உறுதி பூண்டாலே போதும், கருப்புப் பணத்திற்குக் கடிவாளம் போட்டதாகிவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.