குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

வாயிற்படியில் ஆபத்து!

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கள்கிழமை தாக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த 6 பயங்கரவாதிகள் ஆப்கன் தேசியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:49 am

ஆசிரியர்

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கள்கிழமை தாக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த 6 பயங்கரவாதிகள் ஆப்கன் தேசியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தன் மீதிருந்த குண்டு வெடித்ததில் இறந்துவிட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்திருக்கிறது. உறுப்பினர்கள் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
 "ஆப்கானிஸ்தானின் எதிரிகள் பாகிஸ்தானின் நண்பர்களாக இருக்க முடியாது' என்று ஒரு மாதத்துக்கு முன்னால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது இந்தத் தாக்குதலின் மூலம் தெரிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானைக் குறிவைக்கும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானால் சட்ட விரோதிகளாகக் கருதப்பட்டு வேட்டையாடப்படுவார்கள் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியது உண்மையானால், பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு பெற்ற தலிபான்கள் இப்படியொரு தாக்குதலுக்கு எப்படி துணிந்திருக்க முடியும்?
 பாகிஸ்தான் பிரதமரும், ராணுவத் தளபதியும் பல தடவை இதுபோல உறுதிமொழி அளித்த போதிலும், இதுவரை தலிபான்களின் தலைமையான "ஷுரா'வின் உறுப்பினர்களையோ, பெஷாவர், குவெட்டா போன்ற நகரங்களில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் தலிபான்களையோ கைது செய்யவில்லை. அது மட்டுமல்ல, தலிபான்களின் தாக்குதல்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் சிராஜுதின் ஹக்கானியின் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
 தலிபான்களையோ அவர்களுடன் தொடர்புடைய ஹக்கானி போன்றவர்களின் பயங்கரவாதக் குழுக்களையோ பலவீனப்படுத்தும் எந்தவித முயற்சியிலும் பாகிஸ்தான் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகள் இடையே இந்த பயங்கரவாத இயக்கத்தினருக்கு ஆதரவு இருப்பது முதல் காரணம். ஏற்கெனவே பாகிஸ்தான் அரசுக்கு எதிராகச் செயல்படும் ஜிகாதிகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், புதிய எதிரிகளை சம்பாதித்துக் கொள்ள பாகிஸ்தான் தலைமை விரும்பாதது இன்னொரு காரணம்.
 இன்னும் பல காரணங்களும் உண்டு. அமெரிக்கா தனது படைகளைப் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் நிலையில், ஆப்கானிஸ்தானை தனது பொறுப்பில் விட்டுவிடும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அப்படிப்பட்ட சூழலில் தலிபான்களுடன் சமரசம் செய்து கொள்ள இப்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதுவதும்கூட, தலிபான்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதன் காரணம்.
 முந்தைய அதிபர் ஹமீது கர்சாய் போல, இப்போதைய ஆப்கன் அதிபர் முகம்மது அஷ்ரப் கனி இந்தியாவுடன் நெருக்கமாக நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்தவில்லை. பாகிஸ்தானுடன்தான் நெருக்கமாக இருக்கிறார். ஆனால், பாகிஸ்தான் அவரிடம் உறுதி அளித்ததுபோல, தலிபான்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவில்லை. இது அதிபர் கனிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
 அதிபர் அஷ்ரப் கனி முன்பு உறுதி அளித்ததுபோல ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தவில்லை. இதனால், பல நிர்வாக அமைப்புகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. போதாக்குறைக்கு, "இஸ்லாமிய தேசம்' ஜிகாதிகள் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றத் தொடங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிலையற்ற தன்மையும் அரசியல் குழப்பமும் "இஸ்லாமிய தேசம்' பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
 ஆப்கன் மத குருமார்கள் ரமலான் மாதத்தில் சமாதானம் நிலவ வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருந்தனர். தலிபான்கள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதல் மூலம் அதை நிராகரித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் தலைநகர் காபூலில் ஒரு விருந்தினர் மாளிகை தாக்கப்பட்டதில் 9 வெளிநாட்டினர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் பிரதேசத்தை தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
 "இஸ்லாமிய தேசம்' பயங்கரவாத இயக்கம் ஆப்கானிஸ்தானில் நுழைவதைத் தடுப்பதும், அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறியதும் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் தலிபான்களின் இப்போதைய இலக்கு. ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று "இஸ்லாமிய தேசம்' பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு தலிபான்கள் கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 ரஷியா, சீனா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சி அச்சுறுத்தலாகி இருக்கிறது. இந்தியாவிலும் "இஸ்லாமிய தேசம்' நுழைய தலைப்பட்டிருப்பது கவலையளிக்கும் போக்கு.
 இந்தியா மிகவும் எச்சரிக்கையாக ஆப்கன் விவகாரத்தைக் கையாள வேண்டும். அமெரிக்கா போல ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்யாவிட்டாலும், மிகப் பெரிய அளவில் அங்கே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்திருக்கிறோம். பாகிஸ்தானின் தூண்டுதலால், இந்தியா நிறைவேற்றி வரும் கட்டமைப்புத் திட்டங்கள் தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
 பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான ஆப்கனின் போராட்டத்துக்கு நாம் உதவவும் முடியாது; அதேநேரத்தில், வாளாவிருக்கவும் முடியாது என்கிற தர்மசங்கடம் இந்தியாவுக்கு. நமது வாசலில் ஆபத்து காத்திருக்கிறது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.