இப்போதும்கூட, தொழிலாளர்கள் உடல் நலம் குன்றி வேலைக்குச் செல்ல முடியாத நாள்களுக்கான சம்பளம் ஈட்டுறுதி, தொழிற்கூட விபத்தில் நிரந்தர அல்லது தாற்காலிக ஊனம் அடைந்தால் அதற்கான மாதாந்திர இழப்பீட்டுத் தொகை ஆகியன, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் போலவே வழங்கப்படுகின்றன. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளரின் குடும்பத்தினர் அனைவரும் சிகிச்சை பெற முடிவதைப்போல, குடும்பத்தில் மூன்று பேருக்கான மருத்துவக் காப்பீட்டை ஒரே சந்தாத் தொகையில் உள்ளடக்கும் திட்டங்களையும் தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வைக்கின்றன. ஆகவே, மருத்துவச் சேவையை தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, தொழிற்கூடங்கள், தொழிலாளர்கள் வழங்கும் சந்தாத்தொகை மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவற்றோடு, வெறுமனே நிர்வாகக் கண்காணிப்பை மட்டும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு தொழிலாளர் அமைச்சகம் வந்துவிட்டது என்பது தெளிவு.