பல மணி நேர விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் செய்ய முடியாத சாதனைகளை, சர்வதேச அரசியலில், சில நிமிட சந்திப்புகள் செய்துவிடும். நீண்ட நாள்களாகத் தீர்வு காண முடியாத பிரச்னைகளுக்கு, சில நல்லிணக்க சமிக்ஞைகளோ, அடையாளச் செயல்பாடுகளோ தீர்வு காணக்கூடும். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கூடிய சர்வதேச பருவநிலை மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் நட்புறவுடன் கலந்தாலோசித்த அந்த இரண்டு நிமிடங்களின் விடியோ காட்சி, இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவில் மிகப்பெரிய மாற்றத்தை (தோற்றத்தை?) ஏற்படுத்தி இருக்கிறது.
÷தெற்காசிய அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் என்ன காரணத்துக்காக பாரீஸ் மாநாட்டில் கலந்து கொண்டன என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டு நாட்டின் தலைவர்களும் கருத்துப் பரிமாறிக் கொண்ட விதம், முறிந்துபோன பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர்வதற்கான அறிகுறிகளைத் தோற்றுவித்திருக்கிறது. அவர்கள் மிகக் குறைவான நேரம்தான் அருகருகே அமர்ந்து அளவளாவினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள், எது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர் என்பது பற்றியெல்லாம் தெரியாது. இரண்டு தரப்பும் வெளிப்படுத்தவும் இல்லை. ஆனால், அவர்கள் அருகருகே அமர்ந்திருந்த விதமும், அவர்களது முக, உடல் பாவனை வெளிப்படுத்திய நெருக்கமும், நட்புறவும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடு என்று தோன்றியது.
÷பிரதமர் மோடியும், பிரதமர் நவாஸ் ஷெரீபும் கடைசியாக சந்தித்தது கடந்த ஜூலை மாதம் ரஷியாவில் நடந்த உஃபா மாநாட்டில். அதற்குப் பிறகு இப்போது பாரீஸில் நடந்த சர்வதேச பருவநிலை மாநாட்டில்தான் மீண்டும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.
÷கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் நவாஸ் ஷெரீபும் ஐ.நா. பொதுக் குழுவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, இருவருமே நியூயார்க்கில் ஒரே ஐந்து நட்சத்திர விடுதியில்தான் தங்கியிருந்தனர். ஆனால், சந்தித்துப் பேசவில்லை. ஐ.நா. சபையில் எதிரெதிராக சந்தித்தபோதுகூட, கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்களே தவிர மரியாதை நிமித்தம் "ஹலோ' கூடக் கூறவில்லை.
÷ஐ.நா. பொதுக் குழுவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வழக்கம்போல, இந்திய பாகிஸ்தான் உறவுக்கு அடிப்படை நிபந்தனையாக காஷ்மீரை முன்வைத்துப் பேசியதை பிரதமர் மோடி அங்கீகரிக்கவில்லை. "அன்னியப் படையெடுப்பின்கீழ் உள்ள காஷ்மீர்' என்பதை முன்னிறுத்திய பிரதமர் நவாஸ் ஷெரீபின் உரையை, வரிக்கு வரி பதிலடி கொடுத்துப் பேசினார் பிரதமர் மோடி.
÷பாகிஸ்தானைப் பொருத்தவரை, ஐ.நா. சபையிலும் சரி, பாதுகாப்புக் குழுவிலும் சரி, "காஷ்மீரை' சர்வதேசப் பிரச்னையாக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியைத்தான் சந்தித்திருக்கின்றன. கடைசியாகக் காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில், அதுவும் ஐந்து நாடுகள் மட்டுமே உறுப்பினராக உள்ள பாதுகாப்புக் குழுவில், விவாதிக்கப்பட்டது 1971-இல். அதற்குப் பிறகு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன என்பது மட்டுமல்ல, இந்தப் பிரச்னையை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையாகத்தான் ஐ.நா. சபை கருதுகிறது.
÷கடந்த ஆகஸ்ட் மாதம் நடப்பதாக இருந்த இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடக்காமல் முறிந்தது முதல், இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமுக உறவு, பேச்சுவார்த்தை, கருத்துப் பரிமாற்றம் எதுவுமே நடைபெறாமல் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஐ.நா. பொதுக் குழு உரை இறுக்கத்தை அதிகரித்து, பேச்சுவார்த்தைக்கு வழியே இல்லாத நிலைமையை ஏற்படுத்தி விட்டது.
÷பிரதமர் நவாஸ் ஷெரீபின் செப்டம்பர் மாத ஐ.நா. சபை உரைக்கும் இன்றைய சூழலுக்கும் இடையில் பாகிஸ்தானில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2008 மும்பை குண்டு வெடிப்புக்குப் பிறகும்கூட பாகிஸ்தான் அங்கே செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்து வந்தது. குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுப் பேசும் ஹஃபீஸ் சையதைக் கட்டுப்படுத்தி வைக்கக் கூட முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு இருந்தது என்பதுதான் நிலைமை.
÷இப்போது பாகிஸ்தான் அரசு விழித்துக் கொண்டிருக்கிறது. ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட 72 பயங்கரவாத அமைப்புகள் குறித்த எந்தச் செய்தியையும் வெளியிடுதல் கூடாது என்கிற கண்டிப்பான தடை உத்தரவை எல்லா காட்சி, ஒலி, அச்சு ஊடகங்களுக்கும் பிறப்பித்திருக்கிறது நவாஸ் ஷெரீப் அரசு. இந்த அமைப்புகளுக்கு நன்கொடை கோரி வெளியிடப்படும் விளம்பரங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உலக நாடுகள் எதிர்பார்ப்பது இதைத்தான்.
÷இந்தப் பின்னணியில், இரண்டே நிமிட நட்புறவு உரையாடலாக இருந்தாலும், இந்திய பாகிஸ்தானிய பிரதமர்களின் சந்திப்பு மிக அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. அந்தச் சந்திப்பின்போது, இரண்டு பிரதமர்களும் வெளிப்படுத்திய நெருக்கமும், அவர்களுக்குள் காணப்பட்ட பரஸ்பர நட்புறவும் மிக அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.
÷இதுவே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கும், இணக்கமான நட்புறவுக்கும் வழிகோலுமேயானால், அது தெற்காசியாவின் சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட திருப்புமுனை சந்திப்பாகப் பதிவு செய்யப்படும்.