தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஏய்ப்பவர்களும் ஏமாளிகளும்!

மிகுந்த தயக்கத்திற்கும், காலதாமதத்திற்கும் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:44 am

ஆசிரியர்

மிகுந்த தயக்கத்திற்கும், காலதாமதத்திற்கும் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அடங்காப் பிடாரிக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அடக்குவதுபோல, இந்தியப் பொருளாதாரத்தையே பலவீனப்படுத்திக் கொழிக்கும் பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

இனிமேல் வங்கிகளில் கடனை வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்ற நினைக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தத் தொழில் நிறுவனத்தை நடத்தும் குழுமத்தின் ஏனைய தொழில் நிறுவனங்களும் கடன் ஏய்ப்பாளர்களாகக் கருதப்படும் என்பதும், அதன் நிர்வாகத்தில் தொடர்புடைய இயக்குநர்களும் கடன் ஏய்ப்பவர்களாகக் கருதப்படுவர் என்பதும் துணிச்சலான முடிவு. அதற்காக, நாம் ரிசர்வ் வங்கியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பல நிறுவனங்களை நடத்தும் குழுமங்கள், அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள், வெற்றிகரமாக நடைபெறும் தங்கள் நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் புதிதாகத் தொடங்கும் நிறுவனத்திற்கு வங்கிகளின் நிதி உதவி பெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அந்தப் புதிய நிறுவனத்தை முன்மொழிபவர்களின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலும் அந்த நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் வசதியைத் தருகின்றன. அப்படிக் கடன் பெற்ற நிறுவனம், வேண்டுமென்றே இழப்புக் கணக்குக் காட்டி, அந்த நிறுவனம் பெற்ற பல கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏய்ப்பு செய்துவிடுவது வழக்கமாகி விட்டிருக்கிறது.

உதாரணமாக, விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான சேவை நிறுவனம் ஏறத்தாழ ரூ.7,000 கோடி வரை வங்கிகளிலிருந்து கடனைப் பெற்றுத் திருப்பித் தராமல் ஏய்க்க முற்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள 17 வங்கிகள் கிங் பிஷர் விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.7,600 கோடி கடனாகத் தந்திருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடன் தவணைகளை அந்த நிறுவனம் திருப்பித் தருவதில்லை, வட்டித் தொகையை அடைப்பதில்லை, விமான எரிபொருளுக்கான கட்டணத்தைக்கூட சரியாகச் செலுத்துவதில்லை என்பது தெரிந்தும், வங்கிகள் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு எப்படி மேலும் மேலும் கடன் தர முன்வந்தன என்பது விசாரணை ஆணையம் அமைத்தோ, புலன் விசாரணை செய்தோ வெளிக்கொணர வேண்டிய மர்மம்.

நீதிமன்றங்களில் தடையுத்தரவு பெற்றுத் தப்பிக்கவும், தலைமறைவாக மறைவதுமாக விஜய் மல்லையா ரூ.7,600 கோடி மக்கள் வரிப் பணத்தை சாமர்த்தியமாகக் கபளீகரம் செய்து விட்டிருக்கிறார். இப்போது வரை, விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் கடன் ஏய்ப்பாளர் தாக்கீதை வழங்கவோ, அவரைக் கைது செய்து, அவரது ஏனைய மதுத் தயாரிப்பு நிறுவனங்களின் சொத்துகளிலிருந்து கடனை வசூலிக்கவோ முடியவில்லை.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்தான் இதுபோன்ற வரி ஏய்ப்பாளர்களால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருப்பவை. ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி வாராக்கடன்களாக தமது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கழுத்தில் சுமையாக அழுத்துகிறது. இந்த வாராக்கடன்களில் பெருமளவு, 30 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்புடையது எனும்போது, மக்கள் வரிப்பணம் எப்படி மடை மாற்றப்பட்டு ஒரு சிலரது கஜானாவை நிரப்புகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அரசுடைமை வங்கிகளின் இந்த நிலைமைக்கு, மத்திய அரசில் ஆட்சியாளர்களாக இருந்த அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான காரணம். அரசுடைமை வங்கிகளின் தலைவர், மேலாண் இயக்குநர்களாக தங்களுக்கு வேண்டிய வங்கி மேலதிகாரிகளையும், இயக்குநர்களாக ஆளும்கட்சிகளுடன் சார்புடையவர்களையும்தான் நிதியமைச்சகம் நியமித்து வந்திருக்கிறது. இயக்குநர்களில் பலரும் வங்கிச் சேவை பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வுகூட இல்லாதவர்கள். ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும், அரசியல் சார்புடைய இயக்குநர்களின் வற்புறுத்தலாலும் வழங்கப்பட்டு வாராக்கடன்களான பல கோடி ரூபாய்கள்தான் பல பெருநிறுவனங்களின் கடன் ஏய்ப்புக்கு மூலகாரணம்.

அரசுடைமை வங்கிகளின் நிர்வாகம், அரசியல் தலையீட்டிலிருந்து மீட்கப்பட்டு, தொழில் ரீதியிலான வல்லுநர்களின் மேற்பார்வையில் நடந்தால் மட்டுமே இந்தச் சூழலிலிருந்து அரசுடைமை வங்கிகளை மீட்க முடியும். பி.ஜே. நாயக் தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாமல் தூங்குகின்றன. வாராக்கடனுக்கு எதிராகவும், கடன் ஏய்ப்பாளர்களுக்கு எதிராகவும் சவுக்கைச் சுழற்ற முற்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, அரசுடைமை வங்கிகளின் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.