தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

துணிச்சலான முடிவு!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

ஆசிரியர்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். இந்திய சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் ஏறத்தாழ 4 லட்சம் கைதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர், விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்கள். சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகள் காவல் துறையினரால் நிரூபிக்கப்படாமலோ, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி விசாரணைக்கு வராமலோ இருப்பதால், வருடக் கணக்காக சிறையில் அடைபட்டுக் கிடப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் நிரபராதிகளாக இருப்

பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீதி மற்றும் சட்டம், ஒழுங்குத் துறைகளின் மெத்தனப் போக்குக்காக அப்பாவிகள் சிறையில் வாடுவது என்பதே அநீதியான ஒன்று. லட்சக்கணக்கான விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்

பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பிணையில் விடுவிக்கப்படக்கூடிய வழக்குகளிலும்கூட, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பலர் சாதாரண காரணங்களைக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பிணை தர மறுப்பதால்தான் இந்த அளவுக்கு விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

1998ஆம் ஆண்டிலேயே, ஒருவரைப் பிணையில் விடுவிக்க உள்ளூர்வாசிகள்தான் ஜாமீன் தர வேண்டும் என்பதில்லை, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் குடியுரிமை பெற்ற எவரும் ஜாமீன் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும், பல கீழமை நீதிமன்றங்களில் பிணையில் விடுவதைத் தவிர்ப்பது அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக, தில்லியில் உள்ள 50% விசாரணைக் கைதிகள், உள்ளூர்காரர்கள் ஜாமீன் தர முன்வராததால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாதாரணமாக, பொருளாதாரக் குற்றங்களுக்கான குடிமையியல் வழக்குகளில், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரும், வழக்கை காலதாமதப்படுத்துவற்கு என்னென்ன முயற்சிகளைக் கையாள

முடியுமோ அத்தனையையும் கையாள்வது என்பது இயல்பு. அது தனிப்பட்டவர்கள் வசதியைப் பொருத்தது என்பது மட்டுமல்ல, கைது செய்து சிறையில் அடைக்கப்படும் அவலம் குடிமையியல் வழக்குகளில் குறைவு. குற்றவியல் வழக்குகள் அப்படிப்பட்டவையல்ல. இவை அரசு தொடுக்கும் வழக்குகள் என்பதாலும், இதில் காவல் துறையினரின் பங்கு அதிகம் என்பதாலும் தேவையில்லாமல் இந்த வழக்குகள் நீட்டிக்கப்படுவது நிர்வாகத்தின் பொறுப்பின்மையாகத்தான் கருதப்பட வேண்டும்.

விசாரணைக் கைதிகள் பிரச்னையில் இன்னொரு விபரீதமும் விளைகிறது. பல மோசமான குற்றவாளிகளுக்கு இடையில் நிரபராதிகள் விசாரணைக் கைதியாகப் பல நாள்கள் சிறையில் அடைக்கப்படும்போது, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அந்த நிரபராதிகள் பலரைக் குற்றவாளிகளாக மாற்றி விடுகிறது. அவர்கள் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டாலும், குற்றவாளிகளாக வெளியுலகில் உலவும் அவலம் ஏற்பட்டு விடுகிறது.

அதேபோல, விசாரணைக் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் மனவேதனையும், பொருளாதாரச் சீர்குலைவும், குழந்தைகளின் இருண்ட வருங்காலமும், அந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலும் ஈடு செய்ய முடியாத இழப்புகளாகி விடுகின்றன. பல குழந்தைகள் தகப்பன் இல்லாமல், குற்றவாளியின் குழந்தைகள் என்கிற முத்திரை குத்தப்பட்டு விடுவதால், சமூக விரோதிகளாகவே வளர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

குற்றவியல் சட்டப் பிரிவு 436(அ) பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையில் பாதிக் காலம் விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் விடுவிக்கப்படலாம் என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. கொலை, தீவிரவாதம் போன்ற குற்றங்களைத் தவிர, ஏனைய குற்றவியல் வழக்குகளில் 436(அ) பிரிவின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளை அரசு நிர்வாகமே விடுவித்திருக்க முடியும். இப்போது உச்சநீதிமன்றம்

உத்தரவிட்டிருப்பதால், இனியும் அந்த விசாரணைக் கைதிகளைக் காராகிருகத்தில் அடைத்து வைத்திருப்பது தவறு.

இந்த உத்தரவு வெளியான உடனேயே சிறையில் மக்கள் நீதிமன்றம் அமைத்துத் தமிழகத்திலுள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் உள்ள விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் உடனடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றக்கூடக் காலநேரம் பார்த்துத் தாமதப்படுத்தும் போக்கு காணப்படுவது கண்டனத்துக்குரியது.

காலதாமதமாகத் தரப்பட்டிருக்கும் நீதி என்பதே தண்டனைதான். ஆனாலும், காலதாமதமாகவாவது கிடைத்திருக்கிறதே என்பது ஆறுதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.