பணவீக்கத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும் கட்டுக்குள் கொண்டுவந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி இட்டுச்செல்ல சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும், அது சிலருக்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கக்கூடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. இனிக்க இனிக்கப் பேசுவதும், யாரும் முகம் சுளிக்காத வண்ணம் செயல்படாமல் இருப்பதும் அல்ல ஒரு தலைவனின் இலக்கணம். உண்மை நிலையை எடுத்துரைத்து, கடும் நடவடிக்கைகள் மூலம் துணிந்து பிரச்னைகளை எதிர்கொண்டு, ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய கடமை பிரதமராக இருப்பவருக்கு உண்டு என்பதை உணர்ந்து பேசியிருக்கிறார் மோடி.