தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேசத்தின் தனிச் சிறுமை!

ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிவரும்போது, இந்தியா தொடர்பான செய்திகளும், புள்ளிவிவரங்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன.

Updated On :29 ஆகஸ்ட் 2014, 8:01 pm

ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிவரும்போது, இந்தியா தொடர்பான செய்திகளும், புள்ளிவிவரங்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. இதன் அடிப்படையில்தான், பிரதமரும் தனது சுதந்திர தின உரையில், இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை வசதியை உறுதிப்படுத்த முன்னுரிமை அளிக்கப் போவதாகக் கூறியிருப்பார் போலும். பள்ளிகளில் மட்டுமல்ல, கிராமங்களிலும், அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளிலும் கழிப்பறை வசதியை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமை.

1999-இல் வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டபோதே, 2017-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் பொது இடங்களில் இயற்கை உபாதைகளைக் கழிப்பவர்களே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் "நிர்மல் பாரத் அபியான்' திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தது. அப்படி இருந்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் சோகம்.

கழிப்பறை வசதி இல்லாததால், ஏறத்தாழ 62 கோடி இந்தியர்கள், அதாவது, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், திறந்தவெளிகளைத்தான் அன்றாட இயற்கை உபாதைக்கு நாட வேண்டிய அவலம் காணப்படுகிறது. உலகிலேயே அதிகமான பேர்கள் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தும் தனிச் சிறுமை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கிறது.

2017 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு இப்போது 2022 என்று தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், இந்தியாவில் அத்தனை வீடுகளும் கழிப்பறை வசதி உடையதாகவும், எல்லாக் கிராமங்களும், குடிசைப் பகுதிகளும் போதுமான அளவு பொதுக் கழிப்பறைகள் இருப்பதாகவும் மாறிவிடுமா என்பது

சந்தேகம்தான். 1990-இல் 74 சதவீதம் பேருக்குக் கழிப்பறை வசதிக்கான இடங்களே இல்லாமல் இருந்ததை, 2011-இல் 50 சதவீதம் பேருக்கும் கீழாகக்கூட நம்மால் குறைக்க முடியவில்லை என்பதுதான் இந்த ஐயப்பாட்டிற்குக் காரணம்.

இதே 1990 - 2011 இடைவெளியில், நம்மைவிடச் சிறிய அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்றவை மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன.

20 ஆண்டுகளில் வங்கதேசம் கழிப்பறை வசதி இல்லாமையை 32 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், நேபாளம் 84 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாகவும், பாகிஸ்தான் 52 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாகவும் குறைத்திருக்கின்றன.

கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதால் அதிகமாக அவதிக்குள்ளாவது மகளிர்தான். உத்தரப் பிரதேசம் பதோன் கிராமத்தில் இரவில் வயல்வெளியில் இயற்கை உபாதை தீர்க்கச் சென்றபோதுதான் இரண்டு பெண்கள் பலியானார்கள் என்பதை இங்கே கவனத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.

பெண்களுக்கு, அவர்களது வீட்டிலேயோ அல்லது குறைந்த பட்சம் வீட்டின் அருகிலேயோ கழிப்பறை இருப்பது பாதுகாப்பிற்கு அவசியமானது என்பதைத்தான் பதோன் சம்பவம் உணர்த்துகிறது. நகர்ப்புறங்களிலேயே, குடிசைப் பகுதிகளில் இருக்கும் மிகவும் குறைந்த அளவு கழிப்பறைகளின் முன்னால், ஏழைப் பெண்கள் அதிகாலையிலும், முன்னிரவு நேரங்களிலும் வரிசையில் காத்திருக்கும் அவலத்தை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அவர்கள் அங்கே கழிப்பறையின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர்களால்

கேவலமாக நடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோமா?

அரசு கழிப்பறைகள் கட்டுவதற்காக ரூ.10,000 மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தில் நிச்சயமாகக் கழிப்பறை கட்ட முடியாது. அதனால், பலரும் கழிப்பறையின் பெயரைச் சொல்லி மானியத்தை வாங்கிக் கொண்டு, அதைச் சமையலறையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். வழக்கம்போலப் பொது இடத்தில்தான் அவர்கள் தங்கள் காலைக் கடனைக் கழிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தண்ணீர் வசதி உறுதிப்படுத்தப்படாமல் கழிப்பறை கட்டிக் கொடுப்பதால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?

அனைவருக்கும் கழிப்பறை வசதி என்பது உன்னதமான குறிக்கோள்தான். ஆனால், மிகவும் சிக்கலான பிரச்னை. கல்வி, உணவு, வேலை போன்ற நலன்களைக்கூட சற்று தள்ளிப் போடலாம். ஆனால், அன்றாட அவசியமான கழிப்பறைத் தேவையைத் தள்ளிப்போட முடியாது. இந்தப் பிரச்னைக்கு எப்படி, எப்போது தீர்வு காணப்போகிறோம் என்பதன் மூலம்தான் இந்தியாவின் வளர்ச்சி கணக்கிடப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.