120 கோடி பேர் மக்கள்தொகை உள்ள இந்தியாவில் காப்பீடு செய்திருப்பவர்கள் வெறும் 6 விழுக்காட்டினர் மட்டுமே என்பதால் உலகளாவிய நிறுவனங்கள் பல இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் நுழையத் தவித்துக் கொண்டிருக்கின்றன. காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதால், காப்பீட்டுத் துறை காலப் போக்கில் அன்னிய நிறுவனங்களின் கைகளில் போய்விடும் என்பது அபத்தமான வாதம் என்கிறார்கள் அவர்கள். அன்னிய வங்கிகள் இந்தியாவில் செயல்படலாமென்றால், அன்னியக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுவதில் என்ன தவறு என்பது அவர்களின் கேள்வி. எப்படி பன்னாட்டு வங்கிகளின் வரவால், இந்திய வங்கிகள் பாதிக்கப்படவில்லையோ அதேபோல, பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுவதால் அரசு நிறுவனங்களான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான நேஷனல், யுனைடட் இந்தியா, நியூ இந்தியா, ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படாது என்பது அவர்களது கருத்து.