தேசம் "பத்திரம்'!
தாராபுரம் ஒரு சிறுநகரம். மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கே விவசாயம் செய்வதே பெரும்பாடு. இந்நிலையில், அங்கே வாழ்ந்துவரும் ராமலிங்கம் என்கின்ற தனிநபரிடம் - இதுநாள்வரை யாராலும் தொழிலதிபராக அறியப்படாத


தாராபுரம் ஒரு சிறுநகரம். மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கே விவசாயம் செய்வதே பெரும்பாடு. இந்நிலையில், அங்கே வாழ்ந்துவரும் ராமலிங்கம் என்கின்ற தனிநபரிடம் - இதுநாள்வரை யாராலும் தொழிலதிபராக அறியப்படாத - பலதரப்பட்ட சாதாரண வணிகங்களில் ஈடுபடும் நபராக மட்டுமே அறியப்பட்டவரிடம் ரூ.26,000 கோடிக்கு அமெரிக்க அரசின் "கடன்பத்திரங்கள்' பறிமுதல் செய்யப்பட்ட செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அமெரிக்கக் கடன் பத்திரம் ரூ.26,000 கோடியாக இல்லாமல் வெறும் ரூ.26 கோடியாகவே இருப்பினும்கூட, தாராபுரம், "பொன்விளையும் பூமி'யாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இந்தக் கடன் பத்திரங்கள் "போலி'யாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். பிப்ரவரி 2012-இல் இத்தாலியில் இதுபோன்று 6 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்கக் கடன்பத்திரங்கள் (1934-ஆம் ஆண்டில் யு.எஸ். பெடரல் ரிசர்வ் வழங்கியதாக) கைப்பற்றப்பட்டன. இவை "போலி' என்று பிறகு தெரியவந்தது. அதேபோன்று தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டவையும் "போலி'யாக இருக்கலாம். இருப்பினும் இத்தகைய கடன் பத்திரங்கள் ஏன் உலவுகின்றன? எதற்காக? என்பதுதான் இத்தாலியில் பிடிபட்டபோதும், இப்போது தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும் எழும் கேள்விகள்.
இதுநாள்வரை இந்த அமெரிக்கக் கடன் பத்திரங்கள் குறித்து தனது வருமான வரி படிவத்தில் அவர் தெரிவிக்கவில்லை. அண்மையில் ரூ.17 லட்சம் மதிப்பில் அவர் கார் வாங்கியதுதான் அவர் மீது வருமான வரித் துறையினரின் பார்வை பதியக் காரணம் எனப்படுகிறது. இது நம்பும்படியாக இல்லை.
தாராபுரம் ராமலிங்கம், இதுவரை பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார். குறிப்பாக, சிங்கப்பூர் துபாய் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று திரும்பியுள்ளார். இவர் எதற்காகச் சென்றார்? ஒரு தனிநபர் ஏன் இத்தனை முறை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராயப் புகுந்ததால் அவர் வீட்டில் வருமான வரித்துறை, மற்றும் அமலாக்கப் பிரிவினர் சோதனைகள் நடத்தியுள்ளனர்.
இவர் மீது அமலாக்கப் பிரிவின் பார்வை விழுந்ததற்கு நிச்சயமாக வேறு காரணங்கள் இருக்கின்றன. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அவர்களே எதிர்பாராதது.
இதை வைத்திருந்த ராமலிங்கம், "இவை அனைத்துக்கும் கணக்கு இருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கத்தான் இந்தத் தொகையை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டினேன்' என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்த பதில்தான் மிகப்பெரும் ஆபத்தை அடையாளம் காட்டுகிறது.
இந்தியாவில் வசிப்பவர், அல்லது ஒரு நிறுவனம், ஒரு நிதியாண்டில் 2 லட்சம் டாலர் வரை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம், கடன்பத்திரமாகவும் வாங்கலாம் என்று அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (பெமா) அனுமதிக்கிறது. அதேபோல, இந்தியாவில் வசிப்பவருக்கு வெளிநாட்டில் வசிப்பவர் இந்திய அரசின் முன்அனுமதி பெறாமலேயே கடன் பத்திரங்களை அன்பளிப்பாகத் தரவும் "பெமா' விதிமுறைகள் இடமளிக்கின்றன.
இவர் பாணியில், பல நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பல கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என்றால், இந்தியச் சட்டத்தில் இதற்கான ஓட்டைகள் இருக்கின்றன என்று பொருள். இது மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். ஊழல் செய்யும் எல்லா அமைச்சர்களும் தாராபுரம் ராமலிங்கம் காட்டிய வழியில் ஒரு நிறுவனம் தொடங்கி, முதலீட்டாளர்களின் நிதியைத் திரட்டி விடுவார்கள்! அதன்பிறகு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு அமைச்சர் மீதுகூட யாரும் குற்றம் சொல்ல முடியாது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யும் பணம் மட்டுமே கறுப்புப்பணம் என்பதல்ல; வெளிநாடுகளில் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய முடியும் என்பதையும் வெளிநாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் டாலர்களாக அனுப்பி வைக்க முடியும் என்பதையும்தான் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. அதாவது, எல்லாமும் முதலீடு! முறைகேடு அல்ல. இவ்வாறு முறைகேட்டை முதலீடு ஆக்குவதற்கு இந்தியச் சட்டம் உறுதுணையாக இருக்கிறது!
இத்தகைய கடன் பத்திரங்கள், அன்னிய முதலீடுகள் தொழிலுக்காக மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. தீவிரவாதத்துக்கு நிதியாகவும், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் போராட்டங்களுக்கான நிதியாகவும் வந்து சேருமானால், இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது கடினம்தான்.
எச்.எஸ்.பி.சி. வங்கி மூலம் இந்தியாவுக்கு நிறையப் பணம் முறைகேடான வழியில் பலருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அந்த வெளிநாட்டு வங்கி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கெதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
இந்தியாவிலிருந்து எத்தனை கோடி ரூபாய் பணம் வேண்டுமானாலும் அன்னிய நாடுகளுக்குத் தடையின்றி முதலீடாகப் போய்ச் சேரும்; அன்னிய நாட்டிலிருந்து முதலீடாக இந்தியாவுக்கு வரும் என்ற நிலைமை கவலையளிக்கிறது. கடன் பத்திரங்கள் போலியா என்பதைக் காட்டிலும், சட்டங்களே போலியாக இருந்தால்..., நாடு பத்திரமாக இருக்க முடியுமா?
பொருளாதார தாராளமயம், வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவைச் சூறையாடவும், முறைகேடுகள் மூலம் ஒரு சிலரோ, சில நிறுவனங்களோ கொள்ளையடிக்கவும் வழிகோலும் மார்க்கங்களாகி விட்டனவோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் இதுபோல எத்தனை தாராபுரங்கள் உள்ளனவோ, யார் கண்டது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...