இந்த சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்திய அரசு அண்டை நாடுகள் உறவில் சரியாகச் செயல்படவில்லை என்று குறை கூறியுள்ளன. கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஒரு பலம்வாய்ந்த நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் ஊடுருவலும், சண்டைநிறுத்த ஒப்பந்த மீறலும், இந்திய ராணுவத்தினர் மீதான கொலையும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் கடும் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் ஆத்திரத்தில் அர்த்தம் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் எந்த ஆட்சி நடந்தாலும் பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும், அத்துமீறல் இருக்கவே செய்யும் என்பதுதான் மெய்யான நிலைமை.