தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகள் இருந்தால் கட்டாயமாக மின்தூக்கி (லிப்ட்) இருக்க வேண்டும். ஆனால், இந்த மின்தூக்கி எத்தனை பேரைத் தாங்குவதாக இருக்க வேண்டும், எவ்வளவு நீளஅகலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அந்தக் கட்டடம் அலுவலகமா அல்லது குடியிருப்பா என்பதைப் பொருத்தது. இதைச் சோதிக்கவும் மின்தூக்கி முறையாக அமைக்கப்பட்டுச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்து சான்று வழங்கவும் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரேட் தனியாக உள்ளது. மின்வாரியத்துக்கும் இத்துறைக்கும் சம்பந்தம் இல்லை. மின்வாரியம் மின்சாரம் வழங்கும் ஒரு நிறுவனம், இது அரசின் ஒரு துறை. இந்த சோதனைக்காக ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் ஆண்டுதோறும் ரூ.800 கட்டணம் செலுத்தி, சான்று புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த கட்டணத்தைவிட 20 மடங்கு வசூல் நடக்கிறதே தவிர, மின்தூக்கியைச் சோதிப்பது என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது.