பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேறென்ன செய்ய?

ஓரு துளித் தண்ணீர் கூடக் கொடுப்பதற்கு இல்லை என்று கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் கூறிவிட்டார். "கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது, எங்களுக்கே தண்ணீர் போதாது; ஆகவே தர இயலாது' என்பதுதான் கர்நாடக முதல்வர் ஷெட்டர் அளித்துள்ள பதில். ஒரு மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக முதல்வருக்குக் கிடைத்துள்ள பதில் இது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:45 pm

ஆசிரியர்

ஓரு துளித் தண்ணீர் கூடக் கொடுப்பதற்கு இல்லை என்று கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் கூறிவிட்டார். "கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது, எங்களுக்கே தண்ணீர் போதாது; ஆகவே தர இயலாது' என்பதுதான் கர்நாடக முதல்வர் ஷெட்டர் அளித்துள்ள பதில். ஒரு மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக முதல்வருக்குக் கிடைத்துள்ள பதில் இது.

கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்பது தமிழக முதல்வருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவேதான், கர்நாடகம் சட்டப்படி வழங்க வேண்டிய 52.8 டிஎம்சியை வலியுறுத்தாமல், அதில் பாதியளவாக 30 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கேட்டார். இதை நன்றாகவே புரிந்துகொண்ட கர்நாடக முதல்வர், "எங்களுக்கும் பற்றாக்குறை. உங்களுக்கும் தட்டுப்பாடு. அதனால் நீங்கள் கேட்பதில் பாதியைத் தருகிறேன். இருவரும் இருக்கும் தண்ணீரைப் பங்கு போட்டுக் கொள்வோம்' என்று சொல்லி இருந்தால், இருதரப்பு விவசாயிகளும் அவரைப் பாராட்டி இருப்பார்கள். ஆனால், அவர் சொன்ன பதில், ஒரு துளித் தண்ணீர்கூடக் கிடையாது என்பதுதான்.

காவிரி என்பது கர்நாடகத்தின் நதியோ அல்லது தமிழகத்தின் நதியோ அல்ல. அது இந்திய நதி. சொல்லப்போனால் மனித குலம் தழைக்க இயற்கை தந்திருக்கும் கொடை. அதில் ஓடும் தண்ணீரை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதுதானே நியாயமாக இருக்கும்.

ஓராண்டில் எவ்வளவு தண்ணீர் ஓடுகிறது, அதில் எவ்வளவு தண்ணீரை எந்தெந்த மாநிலம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை காலத்தில், இருக்கும் நீரை எவ்வாறு இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்கூட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பற்றாக்குறை காலம் என்பது தெரிந்துதான் தமிழக முதல்வர், தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நீரின் அளவில் பாதியைக் கேட்டார். ஆனால், ஒரு துளிகூடத் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்கிறார் என்றால், பற்றாக்குறை காலத்தில் பகிர்ந்துகொள்ள நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவுகோலுக்கு என்ன மரியாதை?

"நானே திண்டாட்டத்தில் இருக்கிறேன்' என்று வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப தமிழ்நாடு என்ன கடன் கேட்டா செல்கிறது? பற்றாக்குறை நாளில் அவர்களே காவிர் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளவும், மிகைநீர் நாள்களில் போனால் போகிறது என்று சாக்கடையில் விடுவதைப்போல தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதும்தான் கர்நாடகத்தின் செயல் என்றால், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கமா இல்லையா என்று மத்திய அரசைக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசைக் கிடுக்கிப்பிடிபோட்டு நிறுத்தாமல், தமிழக அரசைப் பார்த்து, ""நீங்கள் போய் பேசிப் பாருங்கள்'' என்று ஆலோசனை வழங்கியதால்தானே, நிச்சயம் தர மாட்டார்கள் என்று தெரிந்தும் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையால் பயன் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா போகாமல் இருந்திருந்தால், "நாங்கள் சொன்னோம், தமிழ்நாடு முதல்வர் பேசிப் பார்க்கவில்லை' என்று நீதிமன்றம் சொல்லும். எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா போய்ப் பேசியிருந்தால், தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதற்குக் கர்நாடகம் தயாராக இருந்தது' என்று அறிக்கை விடுவார்கள். விவசாயிகள் பற்றிய அக்கறை இருந்திருந்தால் முதல்வர் கௌரவம் பார்க்கக்கூடாது என்று நீள்நாக்கால் நாலும் பேசுவார்கள்.

எல்லா குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், கர்நாடக முதல்வருடன் பேச்சு நடத்தி, அவர்கள் தர வேண்டியதில் பாதி அளவு நீரைக்கூடத் தர மறுத்துவிட்டார்கள் என்பதை உலகுக்கும், நீதிமன்றத்துக்கும் புரிய வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். இப்போது நீதிமன்றம் என்ன ஆலோசனை வழங்கப் போகிறது? யாருக்கு ஆலோசனை வழங்கப்போகிறது?

ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நியாயம் மறுக்கப்படும்போது கர்நாடக மாநிலத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், காவிரி நதியையும் அணைகளையும் தன்பொறுப்பில் ஏற்று நீரை, பற்றாக்குறை காலத்திற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடி பகிர்ந்தளிக்க வேண்டிய மத்திய அரசு, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அதிமுக இடம்பெறவில்லை என்ற காரணத்துக்காகவும் பாராமுகமாகச் செயல்படுவதால்தானே தமிழகம் நீதிமன்றத்தை நாடிப்போகும் நிலை ஏற்பட்டது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளும் அவற்றின் சார்பில் அமைச்சர் பதவியில் இருப்போரும், தமிழக விவசாயிகளுக்காக மத்திய அமைச்சரவையில் குரல் எழுப்பியிருந்தால், கர்நாடக அரசு இப்படியொரு பதிலை அளிப்பதற்கு ஆயிரம் முறை யோசித்திருக்காதா?

பேச்சுவார்த்தைக்கு வரும்போதே, ஜெயலலிதா பிடிவாதம் காட்டக்கூடாது என்றும், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் கொடுத்தால் எங்களை மக்கள் ஓடஓட விரட்டுவார்கள் என்றும் காவிரி பாதுகாப்புக் குழுத் தலைவர் மாதே கௌடாவால் முந்தைய நாளே, ""தண்ணீர் இல்லை'' என்று மறைமுகமாகச் சொல்லும்படி செய்வார்களா?

""நீதிமன்றத்திடம் ஆயிரம் காரணம் சொல்லலாம்; தீர்ப்பை அமல்படுத்தாமல் கண்டனத்துக்கும் ஆளாகலாம்; நம் ஆட்சியைக் கலைத்துவிட மாட்டார்கள்; அணைகளை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளாது; ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தின் நலனைவிடக் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பது முக்கியம்; தமிழகத்துக்காகக் குரல் கொடுக்க மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வேட்டி கட்டிய தமிழர்கள் யாரும் இல்லை'', என்கிற தைரியம்தானே கர்நாடகத்திற்கு இத்தகைய துணிவைத் தந்திருக்கிறது?

இனி உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது, மத்திய அரசு என்ன சொல்லப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதல்லாமல் நமக்கு வேறென்ன வழி?

பாரதியின் வைரவரிகள்தான் நினைவுக்கு வருகின்றன - ""ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.