"தடை'யில் ஊழல்
மின்தடை ஒரு தலையாய பிரச்னை என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் மின்தடையைக் காரணமாகக் கூறும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.


மின்தடை ஒரு தலையாய பிரச்னை என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் மின்தடையைக் காரணமாகக் கூறும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வியாபாரிகள், சிறுதொழிற்கூடங்கள், தனியார் நிறுவனங்கள், "இன்வெர்ட்டர்' போட்டு "டி.வி. சீரியல்' பார்க்க வசதியில்லாத நடுத்தர வருவாய் குடும்பத்தினர் ஆகியோர் மட்டுமல்ல, அரசுத் துறைகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
திருச்சி மாநகராட்சியில், புதைசாக்கடை திட்டத்தில் சேகரமாகும் கழிவுநீர், புறநகர்ப் பகுதியில் உள்ள பஞ்சப்பூர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின்மோட்டாரால் உந்தப்படுகிறது. இந்தப் பணியைச் செய்ய வேண்டிய குடிநீர் வடிகால் வாரியம், மின்தடையைக் காரணம் காட்டி தனது பணியை முறையாகச் செய்யவில்லை. இதனால் கழிவுநீர், புதைசாக்கடையைவிட்டு வெளியேறி, சாலைகளில் ஓடத் தொடங்கியது.
"கழிவுநீரை உந்தும் பணி நடைபெறாததற்குக் காரணம் மின்தடையே. டீசல் செலவை மாநகராட்சி ஏற்குமேயானால் நாங்கள் இப்பணியை முறையாகச் செய்வோம்" என்று குடிநீர் வடிகால் வாரியம் கூறியதால், நவம்பர் மாதம் முதல் 2013 மார்ச் வரையிலான 5 மாதங்களுக்கு, டீசல் செலவுக்காக ரூ.28.19 லட்சமும் ஜெனரேட்டர் வாடகைக்காக ரூ.2.40 லட்சமும் ஒதுக்கியுள்ளது திருச்சி மாநகராட்சி.
இதே திருச்சி மாநகராட்சியில், குடிநீரேற்றும் பணி தடைபடாமல் இருக்க தொடர் மின்சாரம் வழங்கப்படும் நிலையில், கழிவுநீரேற்றுப் பணிக்கும் தடையற்ற மின்சாரம் கேட்பதில் மாநகராட்சிக்கு என்ன தயக்கம்?
மாநிலத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. திருச்சியின் மாநகராட்சி மேயர் அதிமுகவைச் சேர்ந்தவர். இந்நிலையில், கழிவுநீரேற்றுப் பணிக்காகத் தடையற்ற மின்சாரத்தைத் தனித்து வழங்கக் கோராமல், ஏன் மக்கள் பணம் டீசலுக்காக வீணடிக்கப்பட வேண்டும்?
மேலும், ஒரு புதைசாக்கடையில் எப்போதும் சாக்கடை நிரம்பி ஓடாது. ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அதிக அளவுக்கு சாக்கடை நீர் ஓடும். அத்தகைய நேரத்தைக் கணித்து, அதற்கேற்ப தங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியத்தை வலியுறுத்தவும் செய்யலாம். இவ்வாறு திட்டமிடல் சாத்தியம். ஆனால், மின்தடையைக் காரணம் காட்டுகிறது குடிநீர் வடிகால் வாரியம், அதன் நிர்பந்தத்துக்கு ஆளாகிறது மாநகராட்சி. மக்கள் பணம் ரூ.30 லட்சம் சாக்கடை நீரில் போடப்படுகிறது!
மின்தடையால் பாதிக்கப்படக்கூடாது என்கின்ற ஒரே இடம் அரசு மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக்கூடமாகத்தான் இருக்க முடியும். அங்கு ஜெனரேட்டரை வாடகைக்கு எடுக்க அனுமதிப்பதும், அதற்கான டீசல் செலவை அரசு ஏற்பதும் நியாயமானது, தவிர்க்க முடியாதது.
ஆனால், கொஞ்சம் கால அவகாசத்துடன், சரியான மாற்று திட்டமிடல் மூலம் செயல்பட்டு ஜெனரேட்டர் வாடகை மற்றும் டீசல் செலவுகளைத் தவிர்க்க முடியும் என்ற இனங்களிலும்கூட, மின்தடையைக் காரணம் காட்டி அரசுத் துறைகள் செலவழிப்பது உறுதியாக முறைகேடுகளுக்குத்தான் வழிவகுக்கும்.
இந்நிலை திருச்சி மாநகராட்சியில் மட்டும் என்பதல்ல. எல்லா மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மின்தடையைக் காரணமாக வைத்து டீசல் கணக்குகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மின்தடை பிரச்னை இல்லாத நாளில், ஒரு அரசு அதிகாரி தனது அலுவலக அறையில் எப்போதும் குளிரூட்டு வசதியைப் பயன்படுத்தினால் தவறில்லை. மாநிலமே மின்பற்றாக்குறையில் தடுமாறும் வேளையிலும், கணினி மற்றும் இணையதளத் தொடர்புக்காக ஜெனரேட்டர் அவசியம் என்று நியாயப்படுத்தி, தனது அறையையும் குளுகுளுவென்று வசதியாக்கிக் கொள்வார் என்றால், அந்த டீசல் செலவை அலுவலக நிர்வாகச் செலவில் சேர்த்து எழுதுவார் என்றால், அது ஏற்புடையதல்ல. "இந்த டீசல் செலவு' சிலருடைய வாகனங்களுக்கான செலவுகளையும் ரகசியமாக ஏற்றுக்கொண்டுவிடுகிறது.
"அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டாக வேண்டும். பாதி நேரம் மின்சாரம் இல்லை. வேறு என்ன செய்வது?' என்று அப்பாவிகள் போலக் கேட்பதென்பது, சரியான திட்டமிடல் மற்றும் பணியாற்றும் விருப்பமின்மை ஆகியவற்றின் எதிரொலிதான். அரசு அலுவலகத்தில் கணினியை இயக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பது உண்மையே. எல்லா கணினிகளையும் ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய தேவை கிடையாது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் செய்துகொள்ளக்கூடிய பணிகள், மின்தடையிலும் செய்தாகவேண்டிய இன்றியமையாப் பணிகள் என்று பகுத்துத் திட்டமிட்டால் நிச்சயமாக இத்தகைய ஜெனரேட்டர், டீசல் செலவுகளைத் தவிர்க்கவும் குறைக்கவும் முடியும்.
மின்தடையால் அரசு அலுவலகங்களில் தினமும் 2 மணி நேரம் பணி பாதிக்கப்படுகிறது என்றால், அவர்கள் வேலை நேரத்தை மாற்றிக்கொண்டு, 2 மணி நேரம் முன்னதாகவே வீடு செல்லவும், சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து அதை ஈடு செய்யவும் முன்வரலாமே? தமிழகத்தின் அசாதாரண நிலையைக் கருதி ஏன் இதைச் செய்யக்கூடாது? அதற்குப் பெயர்தானே நிர்வாகம்? தங்கள் வேலை நேரத்தை நிர்வாகம் செய்துகொள்ளத் தெரியாதவர்கள் எப்படி தேச நிர்வாகம் செய்ய முடியும்?
சென்னை மாநகரில் அனைத்துத் தெருவிளக்குகளையும் சூரியஆற்றல் மூலம் எரிய விட்டால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.220 கோடி மின்கட்டணம் மிச்சமாகும் என்று கணிக்கப்படுகிறது. இதுபோன்று அனைத்து உள்ளாட்சிகளிலும் தெருவிளக்குகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சூரியஆற்றல் மூலம் விளக்குகள் எரியவிடப்பட்டால், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மக்கள் பணம் மிச்சமாகும். அதற்கான முயற்சி எடுக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதுவரை இல்லாவிட்டால், இனியாவது இதைப்பற்றி சிந்தித்தாக வேண்டும்.
தேவையை அளவுக்கதிகமாக அதிகரித்துக்கொண்டு விட்டோம். இலவசங்களை வாரி வழங்கி மின்சாரப் பயன்பாட்டை இன்றியமையாததாக்கி விட்டோம். இனி மிகை மின்சாரம் என்பது கானல் நீராகத்தான் இருக்கப் போகிறது. அந்த நிலையில், மின் சிக்கனம், மின் நிர்வாகம் போன்ற விஷயங்களும் தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுமே கவனம் செலுத்தியாக வேண்டும்.
முதலில் அரசு அலுவலகங்களில் ஜெனரேட்டர் தேவை இல்லாத நிலையை அரசு உருவாக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அத்துடன் "டீசல் ஊழல்' இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...