ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான 21 நாள் தேசிய ஊரடங்கால் ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ. 7 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 25-ஆம் முதல் நாட்டின் 70 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிவிட்டன. மக்களுக்கான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், அரசு சாா்ந்த முக்கியப் பணிகள், வீட்டில் இருந்து கணினி வழியே செய்யக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பணிகள்/சேவைகள், விவசாயப் பணிகள் உள்ளிட்ட குறைவான செயல்கள் மட்டுமே நடைபெறுகின்றன.