வீட்டில் அம்மா என்றொருத்தி இல்லாத காரணத்தால் தானே இத்தனை அவலமும்? சரி ஒரு சிற்றன்னை வந்தால் எல்லாமும் சரியாகி விடும் என்று அப்பாவுடன் பிறந்த சித்தப்பா மனைவி சொல்ல, அதைக்கேட்டு அப்பாவை நிர்பந்தித்து அவருக்கொரு மறுமணம் ஏற்பாடாகிறது உமாவின் வற்புறுத்தலின் கீழ். சிற்றன்னை வந்தால் அம்மாவாகி விடுவார் என்ற உமாவின் மனக்கோட்டையும் எதிர்பார்ப்பும் அவள் வந்த ஓரிரு வாரங்களுக்குள் தவிடு பொடியாகி விடுகிறது. முன்பாவது தம்பியையும், வீட்டையும் மட்டும் பார்த்துக் கொண்டு கொஞ்சம் படிக்க கிடைத்தது உமாவுக்கு. இப்போதோ... சித்தி வந்த பிறகு அவளது வேலைகளையும் இவளே செய்யும் படியானதில் அந்தச் சின்னப்புறாவின் சிறகுகள் தினந்தோறும் ஒடிக்கப்படும் சித்ரவதைக்கு உள்ளாகின. சித்திக்கு ஒரு குழந்தை பிறந்த போது அவளது புத்தியிலும் தடுமாற்றம் வந்தது,. உமாவின் அத்தை மகன் ஹரியுடன் சித்திக்கு தவறான தொடர்பு ஏற்பட்டு முடிவில் சித்தி அவனுடனே அனுப்பி வைக்கப்படும் துயர முடிவு நேர்ந்தது.