சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவி மறைந்தார். இன்றோடு 5 நாட்களாகி விட்டன. இப்போது கூட நம்பத்தான் முடியவில்லை. என்ன ஆயிற்று ஸ்ரீதேவிக்கு?! நன்றாகத்தானே இருந்தார். ஸ்ரீதேவியைப் பொருத்தவரை அவருக்கு திரையுலகில் நுழைவதற்கு முன் ஒரு வாழ்க்கை, திரையுலகில் நுழைந்த பின் ஒரு வாழ்க்கை என்ற இரட்டை வாழ்க்கையே இல்லை. அவர் நடிகர் கமல்ஹாசனைப் போல வெகு இளம் வயதிலேயே நடிக்க வந்து விட்டார். ஆதலால் பள்ளிக் கல்வியோ, பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் பொதுவெளி, பொதுமக்களுடனான அனுபவங்கள் என்பதே இல்லாதவர். அவருண்டு அவரது பெற்றோர், உடன்பிறந்தார், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களில் பணிபுரிந்தவர்கள் உண்டு என்றே மிகக் குறுகியதொரு வட்டத்தில் வாழ்ந்தவர் அவர். இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் குறிப்பிட்டிருந்ததைப் போல ஸ்ரீதேவி தனது சொந்த வாழ்வில் நிஜமான சந்தோஷத்துடன் தான் வாழ்ந்தாரா? அல்லது திரையில் நடித்ததைப் போலவே திரைக்குப் பின்னான இயல்பு வாழ்க்கையிலும் நடித்தே வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாரா? என்பது புதிரான கேள்வி!