தேர்ந்த இசைக்கலைஞராகவும், கதக் நடனக்கலைஞராகவும் மேலே, மேலே, மேலே சாதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தவரான கெளஹருக்கு அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லா தேவதாசிப் பெண்களையும் போலவே இல்லற வாழ்வு சோபிக்கவே இல்லை. அதனால் வந்து சேர்ந்த துன்பங்கள் தான் அதிகம். ஆயினும் கெளஹரின் வாழ்வில் மூன்று ஆண்களை முக்கியமான நபர்களெனக் கூறலாம். முதலாமவர் ஜமீன்தார் நிமாய் சென். இவரிடமிருந்து கெளஹர் பெற்ற செல்வம் அளவிட முடியாதது என்கிறார்கள் அக்காலத்திய மக்கள். ஒரு தேவதாசியுடன் சினேகம் கொண்டால் மலை போன்ற செல்வத்தையும் கரைத்துக், கரைத்து உறிஞ்சிக் குடித்து சிறு மடுவாக்கி விடுவார்கள் அவர்கள் என்பதற்கு கெளஹரை உதாரணமாக்கினார்கள் அன்று அவர்களை அறிந்தவர்கள். நிமாய் சென்னுக்கு, கெளஹர் ஜானின் மேலிருந்த ப்ரியத்துக்கு எதை உதாரணமாக்கினாலும் தகாது. அப்படிக் கொட்டியளந்தார் என்கிறார்கள். கெளஹர் ஜான் வாழ்வில் இரண்டாவது ஆண்... சையது குலாம் அப்பாஸ் எனும் கெளஹரின் தனி உதவியாளர். இவரே கெளஹரின் இசைக்கச்சேரிகளில் தபேலா வாசிப்பவராகவும் இருந்தார். கெளஹரை விட 10 வயது இளையவர், ஆயினும் கெளஹர் இவரை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் சில காலங்களிலேயே தோல்வியைச் சந்தித்தது. ஏனெனில், பொருள் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சையது செய்த துரோகங்களை கெளஹரால் மன்னிக்க இயலவில்லை. அடுத்ததாக கெளஹரின் வாழ்வில் இடம்பிடித்த மூன்றாவது நபர் அம்ருத் வகல் நாயக். பிரபல குஜராத்தி மேடை நாடகக்கலைஞரான அம்ருத்துடனான உறவும் 3, 4 வருடங்களில் முடிவுக்கு வந்தது. இந்த உறவில் இருவருக்கிமிடையே நீடித்த பேரன்பும், பெருங்காதலும் நீண்ட நெடுங்காலம் நீடிக்கும் என இருவரைப் பற்றியும் நன்கறிந்த நண்பர்கள் ஆனந்தித்திருந்தனர். ஆனால், இந்த உறவு இடையில் தடைபடக் காரணம் மனவேறுபாடு அல்ல, மரணமே!