பெர்த்தா மேற்கொண்ட இந்த சாலைப் பயணம் ஏன் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது எனில், அந்தப் பயணம் அந்தக் கால மக்களிடையே முற்றிலும் புதியது. திருமணமான பெண்களுக்கென தனி சட்டங்களும், கட்டுப்பாடுகளும் மிகுந்த ஜெர்மனியில் திருமதி ஒருவர் தன் நான்கு குழந்தைகளுடன் காரில் 143 கிலோ மீட்டர் பயணிப்பதெல்லால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சாகஸங்கள். அந்த சாகஸத்தைத் தன் கணவரின் பொருட்டு நிகழ்தத் துணிந்தார் பெர்த்தா. அதற்கு கிடைத்த பரிசு தான் பென்ஸ் காருக்கு கிடைத்த சந்தை வரவேற்பு. ஆம், பெர்த்தா பென்ஸ் நிகழ்த்திய அந்தப் பயணத்துக்குப் பிறகு தான் உலகின் முதல் காப்புரிமை பெற்ற மோட்டார் காரான பென்ஸின் பலாபலன்கள் குறித்து மக்களுக்கு பூரணமாகத் தெரிய வந்தது. பலர் பென்ஸ் கார் வாங்கும் விருப்பத்தை வளர்த்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் கார்ல் பென்ஸ் ரோட் ட்ரிப் சென்ற தன் மனைவி கூறிய அனுபவங்களின் துணை கொண்டு முதல் பென்ஸ் காரில் இருந்த சிறு சிறு குறைகளைக் கூட களைந்தார். இப்போது பென்ஸ் அனைவரது உபயோகத்துக்கும், அதிக தூரத்தை சொகுஸாகக் கடப்பதற்கும் உரியதாக மாற்றமடைந்தது. அப்புறம் பென்ஸ் கார், அகில உலக கார்சந்தையில் சாதித்த வெற்றிகள் அனைத்துமே வரலாறுகள். ஆனால், அந்த வரலாற்று விருட்சத்துக்கான விதையை ஊன்றியவர் கார்ல் பென்ஸ் அல்ல பெர்த்தா பென்ஸ் தான்.