ஆத்தூர் சிலை வடிவமைப்பாளர்களுக்கு வாழ்வளித்த 'அம்மா' சிலைகள்!
பொருளாதார ரீதியாக எங்களது தொழில் நசிந்த நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. தற்போது மீண்டும் அம்மா சிலைகளுக்கான தேவையை முன்னிட்டு எங்களுக்கான ஆர்டர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.


தமிழகமெங்கும் முன்பெல்லாம் எங்கு நோக்கினாலும்; இண்டு இடுக்கில் இடம் கிடைத்தாலும்... கிடைத்த இடத்திலெல்லாம் எங்கிருந்தாவது ஒரு அரசியல் தலைவரது சிலை முளைத்து விடும். அவற்றில் பெரும்பாலானவை அண்ணா, எம்.ஜி.ஆர், முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் சிலைகள், இவர்களைத் தவிர காந்தி, நேரு, இந்திரா காந்தி சிலைகளையும் கூட நாம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் காண முடியும். ஒரு கட்டத்தில் பலருக்கும்; அவரவர் முகவரிகளை அடையாளம் சொல்வதற்கு கூட ஏதாவது ஒரு தலைவரது சிலைக்கு அருகில் வீடு இருப்பதாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தமாகி விட்டது.
இப்படி தமிழகம் முழுதும் பெருகிக் கொண்டிருக்கும் சிலை கலாச்சாரத்தை சகித்துக் கொள்ள முடியாத பொது நல ஆர்வலர்கள் சிலர், சிலைகள் மூலமான ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர். அதன் பலனாக சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பெருவாரியாக ஆக்ரமிப்பில் இருந்த இந்த சிலை கலாச்சாரம் பொது மக்களுக்கு பல விதங்களில் இடையூறாக இருப்பதாகக் கூறி சிலைகள் வைப்பதற்கு உயர்நீதி மன்றம் ஒரு வரம்பை நிர்ணயித்து ஆணையிட்டது.
அதன் பின்னர் அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களின் சிலைகளுக்காக சிலை வடிவமைப்பாளர்களை அணுகுவது படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஜெ மறைவை ஒட்டி மீண்டும் சிலை வடிவமைப்பாளர்களுக்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றனவாம்.
இதையொட்டி சேலம் ஆத்தூரில் சிலை வடிவமைப்புக் கூடம் வைத்திருக்கும் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

பல மாதங்களுக்குப் பின் செல்லியம் பாளையத்திலிருக்கும் எங்களது சிலை வடிவமைப்புக் கூடத்தில் ஈர சிமென்ட்டின் வாசத்தையும், எமுல்ஸன் பெயிண்ட்டின் வாசத்தையும் சுவாசிக்கிறோம். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் சிலை வைப்பு விசயத்தில்; நீதிமன்ற ஆணைக்குப் பின் பொருளாதார ரீதியாக எங்களது தொழில் நசிந்த நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. தற்போது மீண்டும் அம்மா சிலைகளுக்கான தேவையை முன்னிட்டு எங்களுக்கான ஆர்டர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதற்கு முன்பு எங்களது வடிவமைப்பில் தயாரான சுமார் 200 எம்.ஜி.ஆர் சிலைகள் தமிழகம் முழுதும் வைக்கப் பட்டிருக்கின்றன. முன்னர் வைக்கப் பட்ட சிலைகளின் நேர்த்தியைக் கண்டு எங்களுக்கான ஆர்டர்கள் குவிகின்றன.
தற்போது மறைந்த முதல்வர் ஜெ வின் 7 உருவச் சிலைகள் பணி முடிந்து தயார் நிலையில் உள்ளன. அதே சமயம் குடியாத்தம், மணப்பாறை, கும்பகோணம், மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்தெல்லாம் ஜெ உருவச் சிலைகளுக்கான ஆர்டர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. புதுச்சேரி தொழிலதிபரது ஆர்டரின் பேரில், எங்களது தயாரிப்பில் உருவான முதல் ஜெ உருவச் சிலையானது திருக்கண்ணூரில் நிறுவப்பட்டுள்ளது.
அம்மா சிலைகளை வடிவமைப்பதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். ஏனெனில் அவர் தமிழகம் மட்டுமல்ல நாடறிந்த மிகப் பிரபலமான தலைவி. அவரது உருவச் சிலையில் சிறூ பிசகுகள் இருந்தாலும் ஆர்டர் அளிப்பவர்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதோடு சிலைகள் திருப்பி அனுப்பப் படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே எங்களது கை வினைஞர்கள் அம்மா உருவச் சிலைகளை உருவாக்க கடுமையாக உழைக்கிறார்கள். என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...