டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிறு, குறுந் தொழில்கூடங்களில் திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை!

ஈரோடு: தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில்கூடங்களில் திறன்மிகு தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால், தொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் இருந்தும் போதிய உற்பத்தி செய்ய முடியாமல் ந

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:22 pm

ஜெபலின்ஜான்

ஈரோடு: தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில்கூடங்களில் திறன்மிகு தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 இதனால், தொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் இருந்தும் போதிய உற்பத்தி செய்ய முடியாமல் நெருக்கடியில் தவித்து வருகின்றன.தமிழகத்தில் சுமார் 11.5 லட்சம் சிறு, குறுந்தொழில்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில், 6.38 லட்சம் தொழில்கூடங்கள் பதிவு பெற்றவை; மற்றவை பதிவு செய்யப்படாதவை.

 2 வகை தொழில்கூடங்களிலும் சுமார் 70 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில், 40 லட்சம் பேர் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் அல்லது அனுபவ அடிப்படையில் திறமைபெற்ற திறன்மிகு தொழிலாளர்கள். கோவை, திருப்பூர், சென்னை, விழுப்புரம், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர், தருமபுரி, சிவகாசி, தூத்துக்குடி, ஒசூர் உள்ளிட்ட நகரங்களில் இந்தவகை தொழிற்கூடங்கள் அதிகமாக உள்ளன. ஜவுளி, பொறியியல், உணவு பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பலவகை தொழில்களில் இவை ஈடுபட்டுள்ளன.

 அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொறியியல் நிறுவனங்களில் இருந்த மெஷின் ஆபரேட்டர்கள், வெல்டிங் மெஷின் ஆபரேட்டர்கள், ஜவுளி நிறுவனங்களில் கட்டிங் மாஸ்டர்கள் உள்ளிட்ட திறன்மிகு தொழிலாளர்கள் பலர் வேறுதொழில்களுக்கு மாறிவிட்டனர்.

 இதனால், இந் நிறுவனங்களில் திறன்மிகு தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிதாக தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் குறைந்தபட்சம் ஓராண்டாகும் என்பதால் செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர், தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

 இதுகுறித்து, ஈரோடு மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்க (இடிசியா) தலைவர் சுப்பிரமணியன் கூறியது:

 ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி, உணவு பதப்படுத்தல், துணி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பதிவுபெற்ற சிறு, குறுந்தொழில்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில், 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றில் 70 சதவீதம் பேர் திறன்மிகு தொழிலாளர்கள்தான். இங்கிருந்த தொழிலாளர்கள் பலர், வேறு தொழிலுக்கு மாறிவிட்டதால் சுமார் 40 ஆயிரம் திறன்மிகு தொழிலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு பணியாற்றினால் தினமும் ரூ.250 தான் சம்பாதிக்க முடிகிறது. ஆனால், கட்டடப் பணிக்குச் சென்றால் ரூ.400 கிடைக்குமென தொழிலாளர்கள் கருதுகின்றனர் என்றார்.

 இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட குறு மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) எஸ்.ரவிக்குமார் கூறியது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் குறுந்தொழில்கூடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 3.5 லட்சம் திறன்மிகு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

 ஆட்டோ ஓட்டுநர், பெயின்டர், கட்டட மேஸ்திரி உள்ளிட்ட தொழில்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் மாறிவிட்டனர். குறுந்தொழிலில் 6 மாதங்களில் 15 சதவீதம் பேர் வெளியேறிவிட்டனர். இதனால், சுமார் ஒரு லட்சம் திறன்மிகு தொழிலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 15 நாள்களாக மின்விநியோகம் சீரடைந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் இல்லாததால் முழுமையான உற்பத்தி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த ஆண்டில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்குகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இது குறித்து, தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்க (டான்சியா) மாநிலத் தலைவர் கே.ஆர்.தங்கராஜ் கூறியது: தொடர் மின்வெட்டால் திறன்மிகு தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மாற்றுத்தொழிலுக்குச் சென்றுவிட்டனர். படித்தவர்கள் வெளிநாடுகளுக்கும், படிக்காத திறன்மிகு தொழிலாளர்கள் உள்ளூரில் கட்டட வேலை, சமையல், பெயின்டிங் உள்ளிட்ட பணிகளுக்கும் சென்றுவிட்டனர். இதனால், தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில்கூடங்களில் 40 சதவீத திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருச்சிக்கு 2 ஆயிரம் வெல்டர்கள், ஆயிரம் ஃபிட்டர்கள், திண்டுக்கல்லுக்கு 500 ஃபிட்டர்கள் இப்போது உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

 டர்னர், அசெம்பளர், டிரில்லர்கள், கிரைண்டர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. மூலப்பொருள்கள் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவதால் உற்பத்திச் செலவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீத தொழில்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் உற்பத்தி நிறுவனங்கள் இருக்காது. சேவைத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.