/

மத்திய அரசின் கருணை இல்லாததால் பாழடைந்துள்ள தேசிய கலைக் கூடம்

சென்னை, ஜூன் 25 : சென்னை மாநகரில் பழமையான, அழகு நிறைந்த தேசிய கலைக் கூடமான விக்டோரியா நினைவு அரங்கம் மத்திய அரசின் கருணை பார்வை கிடைக்காமல் 10 ஆண்டுகளாக பாழடைந்து காணப்படுகிறது.  திரைப்பட படப்பிடிப்பு

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:52 pm

ப. இசக்கி

சென்னை, ஜூன் 25 : சென்னை மாநகரில் பழமையான, அழகு நிறைந்த தேசிய கலைக் கூடமான விக்டோரியா நினைவு அரங்கம் மத்திய அரசின் கருணை பார்வை கிடைக்காமல் 10 ஆண்டுகளாக பாழடைந்து காணப்படுகிறது.

 திரைப்பட படப்பிடிப்பு நடத்தியதாலும், தொடர் பராமரிப்பு இல்லாததாலும் சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கலை நயமிக்க அரங்கத்தை புதுப்பிக்க மத்திய அரசிடம் ரூ. 7 கோடி நிதி கேட்டு ஐந்தாறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை.

 சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது விக்டோரியா நினைவு அரங்கம். 1887-ல் ராணி விக்டோரியாவின் பொன் விழாவையொட்டி, அவரை கெüரவிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலும், இந்த விக்டோரியா நினைவு அரங்கமும் கட்டடப்பட்டன.

 விக்டோரியா நினைவு அரங்கத்திற்கு 1906-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடத்தை டி. நம்பெருமாள் செட்டியார் என்ற ஒப்பந்தக்காரர் கட்டி முடித்தார். இதை 1909-ல் அப்போதைய ஆளுநர் சர் ஆர்தர் லாலே திறந்து வைத்தார்.

 முற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்திலான கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் தரையில் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

 அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 1951-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த கட்டடத்தை தேசிய கலைக் கூடமாக அறிவித்தார். இதில், தென்னிந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ராஜபுத்திரர் மற்றும் மொகலாயர் ஓவியங்களும், நவீன ஓவியங்களும் இடம் பெற்றன.

 மத்திய அரசால் தேசிய பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள், சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயே ஆளுநர்களின் ஆளுயர ஓவியங்களும் வைக்கப்பட்டன.

 ஓவியங்களின் அழகை கண்டு ரசிக்கவும், இரவில் கலைக் அழகு கூடத்தை வெளியில் இருந்து பார்த்து ரசிக்கவும் குவியும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த கலைக் கூடத்தை ஏராளமான உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வந்தனர்.

 இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கலைக் கூடத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்றன. அப்போது கட்டடத்தில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பழமை வாய்ந்த இந்த கலைக் கூடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, கலைக் கூடத்தின் சுவர்களில் லேசாக விரிசல் ஏற்படத் தொடங்கி 2001-ல் பல இடங்களிலும் விரிசல் ஏற்பட்டது. எனவே, கலைக் கூடத்திற்குள் பார்வையாளர்களை அனுமதித்தால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதால் 2002-ல் கலைக் கூடம் மூடப்பட்டது. அங்கிருந்த ஓவியங்களும், கலைப் பொருள்களும் அருகில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.

 விக்டோரியா நினைவு அரங்கை புதுப்பிக்கும் வகையில், அதை அப்படியே பிரித்து ஓவ்வொரு கல்லுக்கும் இலக்கம் இட்டு மீண்டும் அவற்றைக் கொண்டே வடிவமைப்பை மாற்றாமல் கட்டி முடித்து நவீன தொழில்நுட்பத்தில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்காக மத்திய கலாசார துறையிடமிருந்து ரூ. 7 கோடி நிதி கேட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அருங்காட்சியகம் சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. இதுவரையில் பதில் இல்லை. "தேசிய கலைக் கூடத்தை புதுப்பிக்க நிதி கேட்டு மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டல் கடிதத்தை எழுதி வருகிறோம். இதுவரையில் நிதி வரவில்லை. நிதியைப் பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நிதி கிடைத்ததும் புதுப்பிக்கும் பணி தொடங்கும்' என அருங்காட்சியக நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.