/

உணவுப் பஞ்சத்துக்கு வழிவகுக்கும் உர விலை உயர்வு!

ஈரோடு: பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து உரங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் முழுமையாக விலக்கிக்கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. விவசாயத்தை இழப்பு இல்லாத தொழிலாக உருவாக்க ரசாயன உரங்களின் ப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:46 pm

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து உரங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் முழுமையாக விலக்கிக்கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

விவசாயத்தை இழப்பு இல்லாத தொழிலாக உருவாக்க ரசாயன உரங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. உணவுப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்ட காலத்தில், உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கியது. குறிப்பிட்ட விலைக்கு மேல் உரங்களை விற்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் உரங்களின் விலை கட்டுக்குள் இருந்தது.

இந்நிலையில் உரங்களுக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்தது. இதன்பிறகு உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களை படிப்படியாக குறைத்துக்கொண்டது. இதன் காரணமாக 6 மாதங்களில் உரங்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. பொட்டாஷ் உரம்

ரூ.290லிருந்து ரூ.450ஆகவும், டிஏபி ரூ.480லிருந்து ரூ.900மாகவும் உயர்ந்துள்ளது. கலப்பு உரம் ரூ.320லிருந்து ரூ.720ஆகவும் உயர்ந்துள்ளது. பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள், உரம் விலை உயர்வால் விவசாயத்தை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க பொட்டாஷ் உரம் கடந்த 6 மாதங்களாக கிடைப்பதில்லை.

கலப்பு உரம் தயாரிப்பதற்கு பொட்டாஷ் மிகவும் அவசியம். இந்த உரங்களை தயாரிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் பல இப்போதும் தினமும் 50 டன் வரை கலப்பு உரங்களை தயாரித்து விற்பனை செய்கின்றன. வெளிச்சந்தையில் விற்பனை இல்லாத நிலையில் பொட்டாஷ் உரத்தை உரிய அளவில் கலக்காமல், இந்த உர நிறுவனங்கள் கலப்பு உரங்களை தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இதனை அண்மையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழகம் முழுவதும் 26 தனியார் கலப்பு உரம் தயாரிக்கும் நிறுவனங்களை மூடினர். உரங்களின் மீதான கட்டுப்பட்டை, மத்திய அரசு விலக்கிக்கொண்டதன் விளைவாக, உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய உரிமையை, நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டதாகவும், விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல என்றும் மத்திய நிதி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். தற்போது, உர உற்பத்தி நிறுவனங்கள், விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உர தயாரிப்பு நிறுவனங்களே, உர விலையை நிர்ணயம் செய்யும் பட்சத்தில், பொட்டாஷ், டிஏபி போன்ற உரங்கள் மூட்டை ரூ.1000 க்கு மேல் உயர்ந்துவிடும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு உர விலையை கட்டுக்குள் கொண்டு வருவதாக கூறி, உர மானியத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, புதிய விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க செயலர் சுபி.தளபதி தெரிவித்தது:

உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்பதை பெரும்பாலான விவசாயிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மற்ற பொருட்களின் விலையைப் போன்றே, உரம் விலையும் உயர்ந்துள்ளது என்றுதான் விவசாயிகள் கருதுவார்கள். தேர்தல் நேரத்தில் மானியத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, விலையை நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உர விலையை தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் நிலை உருவாகும் பட்சத்தில் பெட்ரோல், தங்கம் போன்றவைகளின் விலையும் நாள்தோறும் உயரும் நிலை உருவாகும். உரங்கள் விலை உயரும் அதே வேளையில் விளை பொருட்களின் விலை மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் மீது மத்திய அரசு மறைமுகமாக சுமைகளை ஏற்றி வருகிறது. இது அதிகரித்துக்கொண்டே செல்லும் பட்சத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிலரும், இத்தொழிலை விட்டுச் செல்லும் நிலை உருவாகும். இதன் விளைவு நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.