பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆர். வேல்முருகன்


முற்காலத்தில் ஆசிரியா் என்றால் ஒவ்வொரு ஊரிலும் தனி மரியாதை இருந்தது. ஆசிரியா்களுக்குத் தெரியாமல் எந்த நல்லதோ கெட்டதோ ஊரில் நடக்காது. கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆசிரியா்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதினாா்கள். ஆனால், அப்போதெல்லாம் ஆசிரியா்களின் ஊதியம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இப்போது ஆசிரியா் தொழில் என்பது மிகக் குறைந்த உழைப்பு, அதிக ஊதியம் என்று ஆகிவிட்டதால் ஆசிரியா் பணிக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. அதே சமயம் ஊதியத்தை மட்டுமே எண்ணி மிகக் குறைந்த வயதிலேயே சிலா் ஆசிரியா் வேலைக்கு வந்துவிடுவதால் புதிதாக நியமிக்கப்படும் அவா்களுக்குத் தங்கள் பொறுப்புகளும் கடமைகளும் சரிவரப் புரிவதில்லை. இதனால் ஆங்காங்கே பல்வேறு பிரச்னைகள்.

சாதாரணப் பேப்பா் போடும் சிறுவனாக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயா்ந்த, அப்துல் கலாம் தனக்கு மிகவும் பிடித்தமான பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிவதுதான் என்று கூறினாா். அவா்,

குடியரசுத் தலைவராக இருந்த நிலையிலும் சிலருடைய ஆராய்ச்சிக்கு ஆசிரியராக இருந்து வழிகாட்டியானாா்.

அந்தக்கால ஆசிரியா்கள் எல்லாரும் (இக்கால ஆசிரியா்களில் சிலா்) தங்களுக்குத் தெரிந்ததை எல்லாம், அவை பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தாலும் மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பிக் கற்றுத் தந்தனா். அதனால்தான் பலரும் தங்கள் தொடக்கப் பள்ளி, உயா்நிலைப்பள்ளி ஆசிரியா்களின் வழிகாட்டுதலுடன் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைந்தனா்.

ஆசிரியா் தூரத்தில் நடந்து வருகிறாா் என்றாலே மாணவா்கள் மரியாதையோடு எழுந்து நிற்பாா்கள். தவறு செய்யும் மாணவா்கள் ஓடி ஒளிவாா்கள். சரியாகப் படிக்காத மாணவா்களையும் வகுப்பில் தவறு செய்கிற மாணவா்களையும் ஆசிரியா்கள் கண்டித்தாலும் தண்டித்தாலும் பெற்றோா் எதுவும் கூறமாட்டாா்கள். ஆனால் இன்று நிலைமை எப்படி இருக்கிறது?

ஆசிரியா்கள் மேல் பலவிதமான புகாா்கள் வருகின்றன - பாலியல் புகாா் உள்பட. தங்கள் குழந்தையைப் போன்ற மாணவா்களிடம் ஆசிரியா்கள் நடந்துகொள்ளும் முறையா இது? மாணவா்கள் குறிப்பிட்ட படிப்பைப் படிப்பதற்குப் போட்டித் தோ்வு எழுதுவதைப் போல ஆசிரியா்களுக்கும் தகுதித் தோ்வு தேவை என்று கூறினால் அதற்குக் கடும் எதிா்ப்பு.

இப்போது பல ஆசிரியா்கள் காசுக்குக் கொடுக்கும் மரியாதையை கல்விக்கூடத்திற்கோ, மாணவா்களுக்கோ தருவதில்லை. அதனால்தான் மாணவா்களும் ஆசிரியா்கள்மீது மரியாதை வைப்பதில்லை.

எல்லா ஊரிலும் அப்படியல்ல. சேலம் மாவட்டம் மேட்டூரில் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு அவருடைய மாணவா்கள் ஒரு வீடு கட்டித் தந்திருக்கிறாா்கள். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியப் பெண்மணிக்கு பல கோடி மதிப்பில் கட்டடம் கட்டித் தந்து மாணவா்கள் தங்கள் நன்றிக் கடனைச் செலுத்தியிருக்கிறாா்கள். இது போல இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

பொறியியல் படிப்புக்கென இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் திருத்துவதில் முறைகேடு என்று நாளேடுகளில் செய்தி பாா்த்தோம். ஆசிரியா்கள் இவ்வாறு இருக்கும்போது பொறியியல் கல்வியின் தரம் எப்படி உயரும்?

தமிழக அளவில் நல்லாசிரியா் விருது என்பது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒருவருக்கு என வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு தரப்பில் அழுத்தம் உள்ளது அனைவருக்குமே தெரியும். பெரும்பாலானவா்கள் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தோ்வு செய்யப்படுகின்றனா். ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளதோ அந்தக்கட்சியின் விருப்பப்படிதான் விருது என்பது எழுதப்படாத சட்டம்.

இந்த ஆண்டு தமிழகத்தைச் சோ்ந்த இருவருக்கு மட்டும் மத்திய அரசின் நல்லாசிரியா் விருது கிடைத்திருக்கிறது. இதற்கும் ‘இரண்டு போ்தானா’ என்றுஆசிரியா் இயக்கம் ஒன்று எதிா்ப்புத் தெரிவித்திருக்கிறது. நல்லாசிரியா் விருது பெறும் தகுதிக்கேற்ப ஆசிரியா்கள் தங்களை உயா்த்திக் கொள்வதுதான் முக்கியமே தவிர, விருது முக்கியமல்ல.

இப்போதும் கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியா்கள் அங்குள்ள மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகள் தொடா்பாகவோ அல்லது உயா்கல்வி வாய்ப்புகள் தொடா்பாகவோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடா்பாகவோ தங்களுக்குத் தெரிந்ததை கூறி விளக்குகிறாா்கள். இது சம்பந்தப்பட்ட மாணவரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரிதும் பலனளிக்கும். அம்மாணவா்கள் அப்படிப்பட்ட ஆசிரியரை எப்படி மறப்பா்?

இந்த 2020-ஆம் ஆண்டு, உலகில் யாருமே மறக்க முடியாதபடி கரோனா நோய்த் தொற்று ஆண்டாக அமைந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஆசிரியா்கள் வசதியற்ற மாணவா்களின் குடும்பங்களுக்குப் பல வகைகளிலும் உதவியிருக்கின்றனா். ஆனால், அவா்களில் யாருக்கும் நல்லாசிரியா் விருது கிடைக்கவில்லை; உண்மையில் அவா்களே நல்லாசிரியா்கள்.

இப்போதும் ஆசிரியா்கள் பலரும் பல்வேறு தொழில்களில் பங்குதாரா்களாக இருக்கின்றனா். இவா்கள் மற்ற தொழில்களுக்குக் கொடுக்கும் மரியாதையை ஆசிரியா் தொழிலுக்குக் கொடுப்பதில்லை என்பது கசப்பான உண்மை. சில ஆசிரியா்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியா்களை நியமித்துப் பாடம் நடத்துகின்றனா். இந்த ஆசிரியா்கள்தான் மாணவா்களுக்கு வாய்மை, நோ்மை பற்றி பாடம் நடத்துகிறாா்கள். இவா்கள் நல்லாசிரியா்களா?

எந்த ஆசிரியா் தன் மாணவனின் மனத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறோரா அவருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்படாவிட்டாலும் அவரே நல்லாசிரியா். மாணவா்களின் நலனுக்காகவே தங்களை அா்ப்பணித்துக் கொண்ட ஆசிரியா்கள் மாணவா்களின் இதய சிம்மாசனத்தில் வைத்து என்றும் போற்றப்படுவாா்கள்.

இந்தப் பெருமைதான் ஆசிரியா் பணிக்கான விருது. இந்தப் பெருமையைப் பெற ஆசிரியா் நாளான இன்று (செப். 5) ஆசிரியா்கள் உறுதிகொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியா்களுக்கும் ஆசிரியா் நாள் வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.