பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாசிப்பை நேசிப்போம்!

ஏப்ரல் 23-ஆம் நாள் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்தக் கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ஆம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுவது என்று 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:13 am

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

ஏப்ரல் 23-ஆம் நாள் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்தக் கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ஆம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுவது என்று 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை மூலமாக அறிவுசார் சொத்துகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் இந்நாள் உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

1616-ஆம் ஆண்டு இந்நாளில்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோர் காலமானார்கள். மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களின் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ இதே நாள் அமைந்துள்ளது.

உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேசப் பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷியப் படைப்பாளர்கள் கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தக மற்றும் புத்தக உரிமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்ததங்களுக்கும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்த முடியும் என்று உறுதி ஏற்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லையென்றால் நிகழ்காலம்கூட இறந்த காலமாக மாறிவிடும்.

வால்கா முதல் கங்கை வரை வாசித்தேன், அது என் வாழ்வின் பாதையையே மாற்றிவிட்டது என்றார் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்.

நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்காத ஒருவன், படிக்கவே தெரியாத ஒருவனைவிட உயர்ந்தவனல்ல என்றார் ஜவாஹர்லால் நேரு.

ஆயுதத்தின் வலிமையைவிட சக்தி வாய்ந்த புத்தகங்கள் சமூக மாற்றத்துக்கான திறவுகோல்.  கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாசாரம், தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக உள்ளன.

புத்தகம் படிக்கும் பழக்கம் நமது அறிவை விசாலமாக்குகிறது. மனிதனை அறிவுலகத்துக்கு இழுத்துச் செல்வது புத்தகங்களே. அவை மனிதனைப் புனிதனாக்கிப் பண்படுத்துகிறது. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள்.

சிறந்த புத்தகங்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் அது அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும்.

கடந்த 10 ஆண்டுகளில் புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதற்கு புத்தகக் கண்காட்சிகளுக்கு வரும் மக்களின் ஆர்வமும், விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கையுமே சான்று.

தற்போது புத்தகங்கள் மட்டுமல்லாது, இணையதளம், சமூக வலைதளங்கள் வழியாகவும் வாசிப்புத் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

புத்தகங்களை வீட்டில் உள்ள பெண்களிடம் கொண்டு சேர்ப்பதில் வாடகை நூலகங்களின் பங்கு முக்கியமானது. ஆனால், தற்போது மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கத்தால் வாடகை நூலகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

கடவுள் குடிகொள்ளும் இடங்கள் தெய்வக் கோயில்கள் என்றால், புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடமான நூலகம் அறிவுத் திருக்கோயில்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர்.

பல்வேறு தரப்பு வாசகர்களுக்கும் ஏற்ற நூல்களைச் சேகரித்து வைத்துள்ள இந்த அறிவாலயங்களில் நூல்களை இரவலாகப் பெற்று வாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு அறிவு தானம் வழங்குவது இந்த அரசு நூலகங்கள்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று காந்தியடிகளிடம் கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தார்.

இன்று பொதுவாக மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் நூலகப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

தங்கள் குழந்தைகள் பாடப் புத்தகத்தை மட்டும் படித்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். கதைப் புத்தகங்களையோ செய்தித்தாள்களையோ படித்தால் அதைச் சில பெற்றோர் கண்டிக்கின்றனர்.

மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் வளர்ச்சி பெறும்போதுதான் அறிவு விசாலமாகிறது. அவர்தம் கல்வியும் செழுமை அடைகிறது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசாகப் பொருள்களை வாங்கித் தருவதைத் தவிர்த்து நல்ல புத்தகங்களையோ அல்லது சிறுவர் பத்திரிகைகளையோ வாங்கித் தர முன்வர வேண்டும்.

குழந்தைகளின் பிறந்த நாளன்று, சாக்லெட், கேக் போன்றவற்றைத் தருவது பிற குழந்தைகளின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கிறது என்பதால், பல பள்ளிகளில் அந்தப் பள்ளியின் நூலகத்துக்குப் புத்தகங்கள் பரிசளிக்கும் நல்லதொரு நடைமுறையைத் தொடக்கி உள்ளனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச்சென்று நூலக உறுப்பினர்களாக்கி நூல்களை எடுத்து படிக்கப் பழக வேண்டும்.

தற்போது எல்லாப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளன. நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் எடுத்துப் படிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

நாளைய நவீன உலகைக் கட்டமைக்கப்போகும் சிறுவர், சிறுமியர்களுக்கு உலகப் புத்தக தினத்தன்று புத்தகங்களைப் பரிசாக அளிப்போம்.

விழாக் காலங்களில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக அளிப்போம் என்றும், திருமண விழாக்களில் தாம்பூலத்துக்குப் பதிலாக புத்தகங்களை வழங்குவோம் என்றும் இந்த புத்தக தினத்தில் உறுதி ஏற்போமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.