/

செவியுள்ளோர் கேட்கக் கடவர்!

மதுவை விற்பனை செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. மதுவை நுகர்வதில் தமிழர்கள் உலக அளவில் முதலிடம் வகிக்கிறார்கள். இப்படியொரு மதுப்புரட்சியை தமிழ்நாடு இதுவரை சந்தித்ததில்லை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:36 am

ஜெயபாஸ்கரன்

மதுவை விற்பனை செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. மதுவை நுகர்வதில் தமிழர்கள் உலக அளவில் முதலிடம் வகிக்கிறார்கள். இப்படியொரு மதுப்புரட்சியை தமிழ்நாடு இதுவரை சந்தித்ததில்லை.

வேண்டும் என்று கேட்டு அரசின் முன்பாக மக்கள் ஆங்காங்கே முன் வைக்கின்ற பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால், வேண்டாம் என்று ஆங்காங்கே மக்களே ஒன்று கூடி போராடித் தடுக்கின்ற அளவுக்கு மதுக்கடைகள் மட்டும் அரசினால் வேக வேகமாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

மது வேண்டும் என்று கேட்டு ஒரே ஒரு குடிகாரன்கூட கோரிக்கை வைக்காத நிலையில் தானாகவே முன்வந்து திட்டமிட்டுச் செயல்பட்டு மதுவிற்பனையில் அரசு மிகப்பெரிய வருவாயை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய மது உற்பத்தி ஆலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஆலைகளும் தனியாருக்கு அதாவது தனிப்பெரும் முதலாளிகளுக்குச் சொந்தமானவை.

அப்படியான ஆலைகளில் இருந்து கோடிக்கணக்கில் தேவைக்கேற்ப அவ்வப்போது கொள்முதல் செய்கிற மதுப்புட்டிகளைத்தான் தமிழக அரசு தனது

6,800-க்கும் மேற்பட்ட "டாஸ்மாக்' (பஅநஙஅஇ) கடைகளின் வாயிலாக விற்பனை செய்துவருகிறது.

மிகப் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் உறுதியான இரும்பு வேலிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்தகைய இரும்பு வேலிகளின் மிகச்சிறிய சந்துகளின் வழியாகத்தான் அரசுக்கு ஓர் ஆண்டுக்கு 22,000 கோடிக்கு மேல் வருவாய் வந்து கொண்

டிருக்கிறது.

ஒரு காலத்தில் நட்சத்திர விடுதிகள் மட்டும் அரசிடம் அனுமதி பெற்று மதுக்குடிப்பகங்களை ("பார்') நடத்திவந்தன. அரசு மதுவிற்பனையை நேரடியாகக் கையிலெடுத்த பிறகு இந்த நிலை மாறிவிட்டது. ஒரு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஒரு தங்கும் விடுதியில் 40 அறைகளுடன் ஓர் உணவுக்கூடமும் இருக்குமானால் அந்த விடுதியானது அரசுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி அனுமதி பெற்று குடிப்பகங்களை நடத்திக் கொள்ளலாம் என்பதே அந்த நடைமுறை. அந்த குடிப்பகங்களுக்குத் தேவையான மது வகைகளை அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மொத்த விற்பனை மையத்தில்தான் கொள்முதல் செய்து கொள்ளவேண்டும்.

இந்த வகையில் இன்றைக்குத் தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நடுத்தர விடுதிகளில் சொகுசான குடிப்பகங்கள் தோன்றி பல லட்சக்கணக்கான நடுத்தர வருவாய்ப் பிரிவினரை குறிப்பாக இளைஞர்களைச் வளைத்துக் கொண்டன.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், தில்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் மதுவிற்பனையை அரசுகளே நேரடியாகச் செய்து வருகின்றன. கேரள அரசு குடிப்பகங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அந்த மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார். குஜராத், மிசோரம், நாகாலந்து ஆகிய மூன்று மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது.

மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை வணிகம் அரசுகளின் கைகளில் இல்லாமல் அவற்றின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளன. தமிழ்நாடு தான் இவ்வணிகத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. மதுவை அரசாங்கமே விற்பது என்பது ஆட்சியறத்துக்கு எதிரானது என்று நமது முன்னாள் இந்நாள் அரசுகள் நினைக்கவில்லை.

ஒரு படி மேலே சென்று மது விற்பனையை அரசாங்கமே வரிந்து கட்டிக் கொண்டு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும், அதிகபட்சவிலை என்று அச்சடிக்கப்பட்டிருக்கும் விலைக்கும் கூடுதலாக ஐந்து அல்லது பத்து ரூபாய் சேர்த்தே அனைத்து மது வகைகளும் விற்கப்படுகின்றன.

எந்தக் குடிமகனும் அதை எதிர்த்து எதுவும் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால் அவன் விரட்டப்படுவான். பின்னர் ஒவ்வொரு கடையிலும் அப்படியான அந்த ஐந்தும் பத்தும் லட்சங்களாகச் சேர்ந்து பின்னர் பல ஆயிரங்களாகப் பிரிந்து ஆங்காங்கே செல்வதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் எந்த ஆலையின் எந்த மதுவை அதிகமாக விற்பனை செய்ய விரும்புகிறார்களோ அந்த விருப்பம்தான் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் வலுக்கட்டாயமாக அரங்கேறுகிறது. அதுமட்டுமின்றி போலி மதுவகைகள் மது புட்டிகளோடு கலக்கப்படுவதாகவும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கொள்முதல், விற்பனை, தரம் போன்ற எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.

2003 ஆம் ஆண்டு மதுவிற்பனையை அரசு ஏற்றது முதல் விபத்துகளின் எண்ணிக்கையும் அவற்றின் விளைவான உயிரிழப்புகள் மற்றும் உடலுறுப்பு இழப்புகளின் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டுவரையிலான 10 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் வாகன விபத்துகளில் மொத்தம் 90,000 பேர் இறந்துள்ளனர்.

2003 முதல் 2013 வரையிலான பதினொரு ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையோ 1,40,686 பேர். இது மரண விபத்துக் கணக்கு மட்டுமே. காயம், படுகாயம் மற்றும் காயங்கள் ஏற்படுத்தாத விபத்து ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை.

இப்படியான உயிர்ப்பலிகளின் உயர்வுக்குச் சாலைகள், ஓட்டுநர்கள் மற்றும் வாகனப் பெருக்கம் இவையெல்லாவற்றையும்விட மதுவே முக்கியக் காரணம்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் மாடப்பள்ளி எனும் ஊராட்சியில் மட்டும் மதுவுக்குக் கணவனைப் பறிகொடுத்த நூற்று ஐம்பது இளம் விதவைகள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மதுவுக்குக் கணவனைப் பறிகொடுத்து விட்டுக் குழந்தைகளோடு வாழ்விழந்து நிர்க்கதியாகி நிற்கும் இளம் விதவைகள் ஏராளமானோர் உள்ளனர்.

மது மிகவும் எளிதாகக் கிடைக்கத் தொடங்கிய கடந்த பத்து ஆண்டுகளில், இடையறாத தொடர்ச்சியான மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இறந்துவிட்ட இளம் மற்றும் நடுத்தர வயதினரின் இளம் விதவை மனைவியர் தமிழகம் முழுவதும் பல்லாயரக்கணக்கில் இருப்பர்.

தற்போது மிகவும் அதிகமாகத் தென்படுகிற கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளில் மிகப்பெரும்பாலானவை மது மற்றும் அதன் விளைவான சுவரொட்டிகளேயாகும்.

போலி மதுவைத் தடுப்பதற்காகவும் கள்ளச் சாராயத்தை அண்மைக் காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு அறிமுகமாகி இருக்கின்றனர். அரசு மது விற்பனையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயத்தையும் போலி மதுவையும் தேடிப்போயிருப்பார்களா என்ன?

திருவாரூர் அருகில் 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பீர் புட்டியைப் பள்ளிச் சீருடைக்குள் மறைத்துச் செருகிக் கொண்டு மிதிவண்டியில் கரடுமுரடான சாலையில் போய்க்கொண்டிருந்த போது அந்தப் புட்டி வெடித்து உடைய, அதன் கண்ணாடி அவன் வயிற்றைக் கிழித்து அவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே துடிதுடித்து இறந்துபோனான். மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கிற மதுக்கலாசாராத்திற்கு இது ஒரு சான்று.

தமிழக அளவில் எங்கு ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதுதொடர்பான எச்சரிக்கைகளும், விசாரணைகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்படியான நடவடிக்கைகள் ஒரு கண்துடைப்பாக நடந்து மீண்டும் பழையபடி அத்தகைய அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் அது போன்றதொரு கண்துடைப்பு நடவடிக்கைகூட மது தொடர்பான அவலங்களின் பொருட்டு ஏனோ மேற்கொள்ளப்படுவதில்லை.

பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்கள் மது அருந்தும் கலாசாரத்தை ஓர் இயல்பான செயலாக பரப்பிக் கொண்டிருக்கின்றன, அக்காட்சிகள் வீட்டுக்குள் இருக்கிற தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி ஒளிபரப்பில் இடம் பெற்று, மது என்பது இயல்பான ஒரு தேவை எனும் ஒரு கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

பணக்காரர்கள் நட்சத்திர மற்றும் தனியார் விடுதிகளில் குடிக்கிறார்கள். எல்லோருமே குடிக்கத்தான் செய்கிறார்கள். அவையெல்லாவற்றையும்விட நமது அரசாங்கமே மதுவை விற்பனை செய்கிறது.

மேலும் புதிய புதிய மதுக்கடைகளைத் திறந்து இலக்கு வைத்து விற்பனை செய்கிறது என்பன போன்று நடைமுறையில் இருக்கும் இன்னும் பல காரணங்களால்தான் நமது தமிழ்நாடு மதுமயக்க மாநிலமாக மாறி சமூக, பொருளாதார, மனித வள, உற்பத்தி மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பெரிய அளவிலான பின்னடைவைச் சந்தித்தபடியே சரிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழர்களின் எதிர்கால நலமும் வளமும் கேள்விக்கும், கேலிக்கும் உரியதாக மாறிவிடும் என்பது உறுதி.

குழந்தைகளின் கைகளுக்கு எளிதில் எட்டுகிற உயரத்தில் கண்ணாடிப் பொருள்களை வைக்கக்கூடாது என்பதை மது விற்பனை விஷயத்தில் அரசு உணராமல் இருப்பது ஏனோ?

குடிப்பழக்கத்திற்கு ஆளாகிப்போன தந்தைகளாலும், கணவர்களாலும், சகோதரர்களாலும், காதலர்களாலும், பிற ஆண் உறவுகளாலும் மிகப்பெரிய அளவில் உளவியல் பாதிப்புகளையும் உடற்காயங்களையும் அடைந்து இன்றைக்குக் கோடிக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் எழுப்பிக்கொண்டிருக்கும் அவலக் குரலை செவியுள்ளோர் கேட்கக் கடவர்!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.