சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

"காமன்வெல்த்' தலைவராக ராஜபட்ச?

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:59 am

பழ. நெடுமாறன்

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் காணப்பட்ட கடுமையான நிலைப்பாட்டைக் கணக்கில்கொண்டு தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. என்றாலும், அந்தத் தீர்மானத்தை மேலும் கடுமையாக்கவோ, இலங்கை ராஜபட்ச அரசை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவோ இந்தியா முன்கை எடுக்கவில்லை. சொல்லப்போனால், விவாதத்தில் முழுமனதுடன் இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில், மற்றொரு உலகம் தழுவிய அமைப்பு ஒன்றுக்கு இலங்கையைத் தலைமை தாங்கச் செய்யும் முயற்சியில் இந்தியா ரகசியமாக ஈடுபட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகளாக இருந்த பல நாடுகள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்ட நிலையில் "காமன்வெல்த்' என்னும் அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளன. 54 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. கனடா, ஆஸ்திரேலியா போன்ற 17 நாடுகள் பிரிட்டிஷ் அரசியைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் குடியரசுகளாக மாறி, பிரிட்டிஷ் அரசியைத் தங்கள் தலைவியாக ஏற்றுக்கொள்ளாத போதிலும், காமன்வெல்த்தில் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றன.

காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தங்களுக்கிடையே எத்தகைய உடன்பாடுகளும் செய்துகொள்ளவில்லை. விரும்பினால் தொடரலாம், அல்லது விலகலாம். குறிப்பாக, தொழில் வணிக உறவுகளை மிக நெருக்கமாகக் கொண்டுள்ளன, அவ்வளவே!

2011-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் அரசு அதிபர்கள் மாநாடு நடைபெற்ற போது 2013-ஆம் ஆண்டில் இம்மாநாட்டினை இலங்கையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்தியா மிகவும் ஒத்துழைப்புக் கொடுத்தது. ஆழமான நோக்கத்துடன் இந்த மாநாட்டினை இலங்கையில் நடத்தும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

உலக அரங்கில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க் குற்றம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ராஜபட்சவைப் "போர்க் குற்றவாளியாக' சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்ற உலக நாடுகளின் குரல் வலுத்து வருகிற நிலைமையில், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் "அவைத் தலைவராக' ராஜபட்ச விளங்குவார்.

54 நாடுகளைக்கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அவரைப் "போர்க் குற்றவாளியாக' சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்துவது இயலாத ஒன்றாகிவிடும். இந்தத் திட்டத்துடன், வருகிற நவம்பர் மாதம் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தும் ஏற்பாடுகளில் ராஜபட்ச தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இன்னமும் தொடர்வதால் அங்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா அரசு ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அதைப்போல பல்வேறு உலக மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம், குடிமக்கள் பங்கேற்கும் உலகக் கூட்டமைப்பு, காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கைப் பிரசார இயக்கம், பிரிட்டன் ஐ.நா. சங்கம் போன்ற மனித உரிமை அமைப்புகள் காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என வற்புறுத்தி வருகின்றன.

1997-ஆம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பு தன்னுடைய குறிக்கோள்களாகக் கீழ்க்கண்டவற்றைப் பிரகடனம் செய்திருக்கிறது. ஜனநாயக அடிப்படையில் இயங்கும் அமைப்புகள், சுதந்திரமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி, நேர்மையான, ஊழலற்ற அரசு, இனம், நிறம், கொள்கை, அரசியல் நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் எத்தகைய வேறுபாடும் காட்டாமல் அனைவருக்கும் சம உரிமை, பெண்களுக்குச் சமத்துவம் ஆகியவற்றை காமன்வெல்த் நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம், காமன்வெல்த் நீதிபதிகள் சங்கம், காமன்வெல்த் வழக்கறிஞர்கள் சங்கம், காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கம் ஆகியவை கூடி வகுத்த அரசின் மூன்று பிரிவுகளுக்கிடையே நிலவ வேண்டிய உறவு மற்றும் நம்பகத்தன்மை குறித்த கோட்பாடுகள் ஆகியவற்றை காமன்வெல்த் அரசு அதிபர்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டுள்ளனர். அவை வருமாறு:

காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நாடாளுமன்றங்கள், நிர்வாகத்துறைகள், நீதித்துறைகள் ஆகியவை அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்டத் துறைகளில் சட்டரீதியாகவும் அடிப்படை மனிதஉரிமைகளை மதித்தும் நேர்மையுடனும் நம்பகத் தன்மையுடனும் நாணயத்துடனும் செயல்படவேண்டும்.

2002-ஆம் ஆண்டு நவம்பரில் காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் கூடி மேற்கண்ட 3 துறைகளுக்கிடையே மோதுதல் இல்லாமலும் ஜனநாயக நெறிமுறைகளின்படியும் நல்லாட்சியின் அடிப்படையிலும் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டும் நெறிகளை வகுத்தனர். இவற்றை 2003-ஆம் ஆண்டு நைஜீரியாவில் கூடிய காமன்வெல்த் அரசு அதிபர்கள் மாநாடு ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணையம் செயல்படவிடாமல் முடக்கப்பட்டுவிட்டது. 2012-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி ஐ.நா. சிறப்புப் பார்வையாளர் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலை உருவாக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயகா இலங்கையின் அரசியல் சட்டப்படி நீதித் துறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். அந்த ஆணையத்தில் மற்றும் இரு நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்தார். இவர்கள் ஒன்றுகூடி நீதித்துறையில் மூத்தவரான ஒரு நீதிபதியை இந்த ஆணையத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதை ராஜபட்ச விரும்பவில்லை.

செப்டம்பர் 13-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரை வந்து சந்திக்கும்படி செயலாளருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரும் செல்ல மறுத்துவிட்டார். உடனடியாக நீதித்துறை ஆணையத்தில் அங்கம் வகித்த இரண்டு நீதிபதிகளைத் தன்னை வந்து சந்திக்குமாறு ராஜபட்ச ஆணையிட்டார். ஆனால், அவர்களும் செல்லவில்லை.

இதற்கிடையில் நீதித்துறை செயலாளர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு அவர் வீடு தாக்கப்பட்டது. அவரும் படுகாயமடைந்தார். இதன் விளைவாக நாடெங்கிலும் உள்ள நீதிபதிகள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கிய டாக்டர் ஷிராணி பண்டாரநாயகா, அரசு கொண்டுவந்த சட்டம் ஒன்று செல்லாது என 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இது ராஜபட்சவை ஆத்திரம் அடைய வைத்தது. இதன் விளைவாக 2013-ஆம் ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்ட நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுடன் குழுவில் அங்கம் வகித்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். எஞ்சியுள்ள அமைச்சர்கள் அளித்த பரிந்துரையின்படி, தலைமை நீதிபதியை நாடாளுமன்றம் பதவியில் இருந்து நீக்கியது.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளியேறினர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருந்து இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவை அத்தனையும் நாடாளுமன்ற நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன என்பது முக்கியமானதாகும்.

இது குறித்து ஆராய்வதற்காக சர்வதேசப் பார்வையாளர்கள் வரவிரும்பியபோது அவர்களை ராஜபட்ச, இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தார். சர்வதேச சட்ட அமைப்பு, "உண்மை அறியும் குழு' ஒன்றை இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் அனுப்ப முனைந்தது. ஆனால் அவர்களுக்கு "விசா' அளிக்க ராஜபட்ச மறுத்துவிட்டார்.

காமன்வெல்த் அமைப்பின் "செயலாளர் நாயகமான' கமலேஷ் சர்மா, தலைமை நீதிபதிக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் கூறினார். காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் அரசுகளும், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட முறையைப் பலமாகக் கண்டித்துள்ளன.

காமன்வெல்த் செயலாளர் நாயகமான கமலேஷ் சர்மா, இந்த ஆண்டு ஜனவரி நடுவில் காமன்வெல்த் அமைப்பின் உன்னதமான நோக்கங்களுக்கு எதிராக ராஜபட்ச செயல்படுவதாகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக காமன்வெல்த் அமைச்சர்கள் நடவடிக்கைக் குழுவை தாங்கள் கூட்டப்போவதாகவும் கூறினார். பிப்ரவரி மாதம் அவர் இலங்கைக்குச் சென்றுவந்த பிறகு "இலங்கையில் ஜனநாயகத்திற்கு எதிராக மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதன் விளைவாக நீதித்துறை பலவீனப்பட்டு சர்வாதிகார ஆட்சி எதிர்காலத்தில் தோன்றுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது' எனவும் கண்டித்தார். ஆனால், இப்படியெல்லாம் பேசிய கமலேஷ் சர்மா தற்போது அடியோடு மாறிப்போனார். இந்தியரான அவர், புதுதில்லியின் தலையீட்டின் பேரிலேயே மௌனியாக மாறிப்போனதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

காமன்வெல்த் அமைச்சர்களின் நடவடிக்கைக்குழு அந்த அமைப்பின் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றாகும். காமன்வெல்த்தின் அடிப்படையான கோட்பாடுகளுக்கு எதிராக நடக்கும் உறுப்பினர் நாடுகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களை நீக்கவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. உறுப்பினர் நாடுகளில் ஏதாவது ஒன்றில் புரட்சியின் மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றினால் இக்குழு கூடி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயும். அண்மையில் இக்குழு மேலும் பல முக்கியமான நோக்கங்களையும் தனது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. அடிப்படையான ஜனநாயக நெறிமுறைகளையும் மனித உரிமைகளையும் அப்பட்டமாக மீறிச் செயல்படும் நாடுகளுக்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பது என இக்குழு முடிவு செய்திருக்கிறது.

நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், "இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த மாநாடு அங்கு நடத்தப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபட்ச ஆவாரானால் அவரைக் கட்டுப்படுத்தும் வலிமை எந்த உலக அமைப்புக்கும் இருக்க முடியாது.

ஏற்கெனவே ராஜபட்ச, ஐ.நா. பேரவை, ஐ.நா. மனித உரிமை ஆணையம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலக அமைப்புகளைச் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்படுகிறார். தனது நாட்டிற்குள் ஐ.நா. பிரதிநிதிகளோ அல்லது செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளோ சர்வதேச பத்திரிகையாளர்களோ நுழைய விடாமல் தடைபோட்டு வைத்திருக்கிறார். இலங்கைக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள முடியாதபடி "இரும்புத்திரை' போடப்பட்டுள்ளது.

அந்நாட்டின் ஆட்சியும் அரசியல் அதிகாரமும் ராஜபட்சவின் நான்கு சகோதரர்கள் கையில் அடங்கியுள்ளது. குடியரசுத் தலைவராக ராஜபட்சவும், நாடாளுமன்ற அவைத் தலைவராக ஒரு சகோதரரும், பாதுகாப்புத் துறைச் செயலாளராக இன்னொரு சகோதரரும், பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக மற்றொரு சகோதரரும் பதவி வகிக்கின்றனர். மொத்தத்தில் இலங்கையில் "ஒரு குடும்பத்தின் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி' நடைபெறுகிறது.

இனப் படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சிறுபான்மையினரான தமிழர்கள் மட்டும் ஆளாகவில்லை. பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இராணுவத்தின் தலைமைத் தளபதியாக விளங்கிய சரத் பொன்சேகா பொய்யானக் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் சில காலம் இருக்க நேர்ந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயகா, அநீதியான முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ராஜபட்சவுக்கு எதிராகச் செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். "குடியரசு முன்னாள் தலைவரான சந்திரிகா நாட்டைவிட்டே வெளியேற நேர்ந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே இருக்கும் இடமே தெரியாமல் அமைதி காக்கிறார். ராஜபட்ச ஆட்சியை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஆளாகின்றனர். ஊடகத்துறை அடியோடு முடக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை ஒருவர், இருமுறை மட்டுமே வகிக்கலாம் என்ற அரசியல் சட்டப்பிரிவு மாற்றப்பட்டுவிட்டது. தொடர்ந்து ராஜபட்ச அப்பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருப்பது குறித்து ஆராய்வதற்காக ஏப்ரல் 26-ஆம் தேதி இந்தக் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மாலத் தீவில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியை ஒட்டி அந்நாடு நடவடிக்கைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் இக்குழு கூடும்வரை காத்திருப்பது நல்லதல்ல. இக்குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கும் வங்காள தேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் திப்பு மோனி உடனடியாக நடவடிக்கைக்குழுக் கூட்டத்தைக் கூட்டி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருப்பதை தள்ளிவைக்கவும் வேறொரு நாட்டில் நடத்துவதற்குமான முடிவினை மேற்கொள்ள வேண்டும்.

எவ்வளவு விரைவாக இம்முடிவுகள் செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கு காமன்வெல்த் அமைப்பிற்கு நல்லது. இல்லையேல், ராஜபட்சவின் பகடைக்காய்களில் ஒன்றாக "காமன்வெல்த்' அமைப்பு மாற்றப்பட்டு தனது மதிப்பை உலக அரங்கில் இழக்க நேரிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.