தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய வீக்கத்திலே உயர் நோக்கத்திலே காக்கத்திறல் கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு'' என்றார் மகாகவி பாரதி.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:43 pm

ஜெயப்பாண்டி

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய வீக்கத்திலே உயர் நோக்கத்திலே காக்கத்திறல் கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு'' என்றார் மகாகவி பாரதி.

உலகிலேயே எளியோரும், வலியோரும் ஒரே நிலையில் பாதுகாப்புடன் வாழத் தகுதிவாய்ந்த தர்ம தேசமாக பாரதம் விளங்குவதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதையே விவேகானந்தரும் "உலகுக்கு பாரதம் வழிகாட்டும்' என முன்மொழிந்துசென்றார்.

ஆனால், நமது தேசம் தற்போது சந்தித்துவரும் பிரச்னைகளை ஆராய்ந்தால் நாம் நமது முன்னோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயல்படுகிறோமா என்ற கேள்வியே எழுகிறது.

தமிழகத்தின் வறட்சிப் பகுதியை மத்திய குழு பார்வையிட்டுச் சென்ற நேரத்தில்தான் உத்தரகண்டில் மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து போகிறார்கள்.

நீலகிரியில் மழை வெள்ளத்துக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நேரத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சுதந்திரமடைந்து இத்தனை காலமாகியும் நமது அடிப்படைத் தேவைகளைக் கூட அனைவரும் சமமாகப் பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், நமது நிர்வாகத் திறனை என்னவென்று சொல்வது?

நாட்டில் ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, சுத்தமாக்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதும், விவசாயத்துக்கான நீரை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை. ஆனால், நடப்பது என்ன? "தேசிய நீர்க் கொள்கை' எனும் பெயரில் உள்ளாட்சியின் குடிநீர் விநியோகத்தைக் கூட தனியாருக்குத் தாரை வார்க்கத்தானே நமது மத்திய அரசு துடிக்கிறது? இப்படிப்பட்டோருக்கு இயற்கை நீரின் அழிவைத் தடுத்து அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் சிந்தனை எப்படி ஏற்படும்?

ஒவ்வொரு விஷயத்திலும் அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் தனியார்மயத்தை அதிகரித்துவருவது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. குடும்பத் தலைவர் தனது வருவாயில் தனது குழந்தைகள் நலனுக்கு, தானே செலவழித்து மகிழ்வதுதானே அழகு? நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருப்போர், மக்களுக்கான நலத் திட்டத்தை தனியார் பொறுப்பில் செயல்படுத்துவது சரியா என்பதே இப்போதைய கேள்வி.

நாட்டு மக்களுக்கு உணவு, உடை, குடிநீர், வசிப்பிடம் ஆகிய அத்தியாவசியத் தேவையை அரசே வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம். கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்திய மகாத்மா வழிவந்ததாகக் கூறுவோர், கிராமப்புறங்களைக் கூட நகர நாகரீகங்களுக்கு அடிமையாக்கி, வர்த்தக நோக்கில் லாபம் கிடைக்கும் தளங்களாக அல்லவா மாற்றி வருகிறார்கள்? அதன் விளைவே விவசாய நிலங்கள் கூட வீட்டு மனைகளாகின்றன.

உணவையும், இருப்பிடத்தையும் கூட தமது அரசியல் பதவிகளைப் பிடிக்கும் தேர்தல் நேர உத்திகளாகவே அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். அதனால் அரசின் கடமை கூட இலவசங்களாகவே தொடர்கிறது.

நாட்டில் மாதம் மும்மாரிப் (மழை) பெய்து வந்தது; அப்படிப் பெய்த நீரை சேகரிக்க ஏரிகள், கண்மாய்களை அமைப்பது மன்னர்காலத்து அரசின் செயல்பாடாக இருந்துள்ளது. ஆனால், தங்களை சரித்திரப் புருஷர்களாக பாவிக்கும் ஜனநாயகத் தலைவர்களோ, ஏரிகளையும், குளங்களையும்கூட விட்டுவைக்காமல் குடியிருப்புகளாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். கடலில் கால்வாய் அமைக்கப் போராடுவோர், நிலத்தில் நீர் தேங்கிட இடமின்றிச் செய்ததை மறந்துவிட்டனரோ!

நாட்டில் மழை பெய்வதில் மரங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அது மட்டுமல்ல. மரங்கள் மறைமுகமாக நீரின் சேமிப்புக் கிடங்குகளாகவும் இருந்து வந்துள்ளன. மரங்களிலிருந்து பூமியில் விழும் இலைகள் மண்ணின் மீது படர்ந்து செயற்கையான படலத்தை ஏற்படுத்தும். இப் படலம் அடர்ந்த மலைக் காடுகளில் அரையடிக்கும் மேலாக இருக்கும்.

மழையாக பூமியில் இறங்கும் நீரானது மண்ணிற்குள் பாதியும், மக்கிப் போன இலைகளுக்குள் மீதியும் ஒளிந்திருக்கும். இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் நீர் சிறுகச்சிறுக வெளியேறுவதால் ஓடைகள் உருவாகும். அந்த ஓடைகள் ஒருங்கிணைந்தால் ஆறாகும்.

மழைப் பிரதேசங்களில் பாறைகளுக்கு மேலாக உள்ள மண் எப்போதும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே நீரைச் சேமிக்கும் தன்மையில் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அந்த மண்மீது படிந்த இலைப் படலமே நீரைப் பஞ்சுபோல சேமித்து மலைதேசத்து மண்ணைப் பாதுகாக்கும் என்கிறார்கள் தாவரவியல் ஆய்வாளர்கள்.

ஆனால், சமீப காலமாக மலைப் பிரேதசங்களில் தொழில் வளர்ச்சி எனும் பெயரில் மரங்களை வெட்டிவிட்டோம். இதனால் மழைக் காலத்தில் தண்ணீரைத் தாங்கி பூமியைக் காக்கும் இலைப்படலம் இல்லாமலேயே போய்விட்டது. இலைகளுக்குள் தேங்க இடமின்றி மழை நீர் முழுதும் மலை மண்ணின் மீதே தேங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் அதிகப்படியான நீரைத் தேக்கிவைக்க இயலாமல் மண் சரிவு ஏற்படுகிறது. மண் சரியும்போது அதைச் சார்ந்திருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, தவறிழைக்காத மரங்களும் கூட சரிந்துவிடுகின்றன.

மக்கள் நலனுக்காக பெரு நதியின் போக்கை திசை மாற்றுகிறது சீனா. ஆனால் நாமோ, இயற்கை தரும் நீர் வளத்தை மக்கள் நலனுக்காக இணைக்கும் திட்டத்தைக் கூட செயல்படுத்திட யோசிக்கிறோம்.

குடிமக்களாகிய நாம் இயற்கையின் பேரிடரைத் தவிர்க்க நமது சுயநலத்தால் செய்த தவறை உணர்ந்து அதை வருங்காலங்களில் தவிர்க்க முன்வருவது அவசியம். அப்படிச் செய்தாலே "மழை பெய்தால் அழிவு...பொய்த்தால் அவதி...இதுதான் எங்கள் தலைவிதி' என்ற புலம்பல் நிற்கும். இல்லாவிடில், அவலங்கள் தொடர்கதையாகி அது பேரழிவுக்கே வழிவகுக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.