எப்போது இவர்களுக்கு விடிவுகாலம்?
உழவர் சந்தையில் காய்கறிகள் மலிவான விலையில் கிடைப்பதாக மனைவி நச்சரித்ததால்,


உழவர் சந்தையில் காய்கறிகள் மலிவான விலையில் கிடைப்பதாக மனைவி நச்சரித்ததால், காலை 4 மணிக்கே எழுந்து செல்ல வேண்டியதாகிவிட்டது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் அந்த நேரத்திலேயே நல்ல கூட்டம். அரையிருட்டில், மிதமான மின்விளக்குகளின் ஒளியில், மும்முரமாக நடந்து கொண்டிருந்தது வியாபாரம்.
÷கால் வைக்க இடமின்றி, கிடைத்த இடங்களிலெல்லாம் காய்கறிகள் குவிக்கப்பட்டிருந்தன. கடைகளாக ஒதுக்கப்பட்ட மேடைகளிலும் காய்கறிகள் குவிந்திருந்தன. அந்த நேரத்திலும் சில்லறை வணிகர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தில் கோணிப்பைகளுடன் உழவர் சந்தையை முற்றுகையிட்டிருந்தனர். மக்களும் சிறு பைகளுடன் தூக்கக் கலக்கத்துடன் சந்தையில் திரிந்து கொண்டிருந்தனர்.
÷ஒவ்வொரு இடத்திலும் நான் தவறாது கண்டது, காய்கறிகளுடன் காத்திருந்த விவசாயிகளின் ஏக்கப் பார்வைதான். பக்கத்துப் பக்கத்து கடைகளில் ஒரே காய்கறி இருக்கும்போது, தனது கடையில் வாங்க வரும் வாடிக்கையாளருக்காக உற்பத்தியாளர் தவிப்பது இயல்புதான்.
÷உழவர் சந்தையில் சில காய்கறிகளுக்கு மட்டுமே கிராக்கி. அவை நல்ல விலைக்குப் போயின. அதிகமான வரத்து இருந்த காய்கறிகளின் விலைகள் குறைந்தன.
இந்த விலையை உழவர் சந்தை நிர்வாகிகளே நிர்ணயிக்கின்றனர். அப்படியிருந்தும், ஒட்டுமொத்தமாக வாங்க வரும் வியாபாரிகளிடம் தாழ்ந்த குரலில் விலை பேசி, தள்ளி விடுவதில் பல விவசாயிகள் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. இதை வாங்கும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் இரு மடங்கு விலைக்கு விற்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
÷வாங்குபவர்களின் எண்ணிக்கையை விட விற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அந்தச் சந்தை வாங்குபவர்களின் சந்தையாகிறது. இங்கு வாடிக்கையாளர்களே விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். இங்கு விற்பவர்கள் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பது மட்டுமின்றி, கிடைக்கும் விலையை ஏற்றாக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. உழவர் சந்தை இதற்குச் சிறந்த உதாரணம்.
÷காலை 3 மணிக்கே எழுந்து, அறுவடை செய்த காய்கறிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி, பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, உழவர் சந்தைக்கு வந்திருப்பவர்கள் இந்த விவசாயிகள். கொண்டுவந்த காய்கறிகளை விற்றால்தான் இவர்களுக்கு வருமானம். விற்காவிட்டால் அவற்றைத் திரும்பக் கொண்டுசெல்ல தனியே செலவு செய்ய வேண்டும்.
÷அது விரயம் மட்டுமல்ல, விளைச்சலே அனர்த்தம் ஆகிவிடும். இந்தக் காரணத்தால் தான், எப்படியாவது தாங்கள் கொண்டுவந்த காய்கறிகளைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட விவசாயிகள் துடிக்கிறார்கள்.
÷விவசாயி தான் செய்யும் சாகுபடி லாபம் தருமா, நஷ்டம் தருமா என்றே தெரியாமல் பல மாதங்களுக்கு, குடும்பத்தோடு உழைக்க வேண்டி இருக்கிறது. இறுதியில் கிடைக்கும் விளைபொருளுக்கு கிராக்கி இருந்தால் விவசாயி பிழைத்தார். இல்லையேல், அவர் கதி அதோகதி தான்.
÷விவசாய விளைபொருளின் விலை நிர்ணயம் எந்தக் காலத்திலும் விவசாயியிடம் இல்லை. பிற துறைகளில் பொருளின் விலையை உற்பத்தியாளரே நிர்ணயிக்க முடியும்; விவசாயிகளால் அவ்வாறு செய்ய முடியாது.
÷÷நாம் விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில் விவசாயிகளின் விளைபொருளுக்கு உத்தரவாதமான விலை பெற்றுத்தர என்ன ஏற்பாடு செய்திருக்கிறோம்? நெல், கோதுமை, பருத்தி, கரும்பு போன்ற சில பயிரினங்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்கிறது. அதுவே கூடப் போதுமானதாக இருப்பதில்லை.
÷இந்நிலையில், காய்கறி, கனி, கீரை, தானியங்கள் போன்ற விளைபொருள்களின் விலைக்கு உத்தரவாதம் அளிக்க எந்த ஏற்பாடும் இல்லை.
பதனிடும் வசதிகளோ, பாதுகாப்புக் கிடங்குகளோ இல்லாததால், குறுகிய ஆயுள் கொண்ட விளைபொருளை விளைவித்த விவசாயி சாபத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்.
÷÷கையிலிருந்த பை போலவே மனதும் கனத்தது. அதிகாலைக் குளிரையும் மீறி வெப்பமாக பெருமூச்சு வெளிப்பட்டது. அருகில் இருந்த கொத்தமல்லிக் கீரை விற்ற முதிய பெண்மணி "அஞ்சு கட்டு பத்து ரூபா தான் தம்பி... எடுத்துக்கிடுங்க'' என்கிறார். ஏற்கனவே பையில் வாங்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இப்போது எடை கூடிவிட்டது போல அதிகமாகக் கனக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...