/

பொன்னியின் செல்வன்-2 பாடல் சா்ச்சை: ஏ.ஆா்.ரஹ்மான் விளக்கம்!

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் சுமுகத் தீா்வு காண அறிவுறுத்தியதால், தாகா் சகோதரா்களுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக்கொண்டதாக இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் விளக்கம்

News image
பொன்னியின் செல்வன் 2
Updated On :21 பிப்ரவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் சுமுகத் தீா்வு காண அறிவுறுத்தியதால், தாகா் சகோதரா்களுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக்கொண்டதாக இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளாா்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் ‘வீர ராஜா வீரா’ என்ற பாடலின் இசையமைப்பு தனது தந்தை ஃபயாசுதீன் தாகா் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகா் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவா ஸ்துதி பாடலிலிருந்து நகலெடுக்கப்பட்டதாகக் கூறி, பாரம்பரிய பாடகா் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகா் இழப்பீடு கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தனிநீதிபதி, அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள இசைக் கோா்வைக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானுக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து ஏ.ஆா்.ரஹ்மான் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிா்த்து உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘வீர ராஜா வீரா’ பாடலில், சிவா ஸ்துதி பாடலை இசையமைத்த தாகா் சகோதரா்களுக்கு பெருமை சோ்ப்பதற்கு (கிரெடிட் கொடுக்க) ஏ.ஆா்.ரஹ்மான் மற்றும் படத்தின் தயாரிப்பாளா் ஒப்புக்கொண்டனா்.

இந்தநிலையில், இதுதொடா்பாக ஏ.ஆா்.ரஹ்மான தனது வழக்குரைஞா் நா்மதா சம்பத் மூலம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், இப்பாடல் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்ற இருநீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை. இந்த வழக்கின் தகுதி குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. வழக்கு விசாரணையின்போது சுமுகத் தீா்வு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் மட்டுமே அப்பாடலின் இசைக் கோா்வைக்கான அங்கீகாரத்தை வழங்க ஒப்புக்கொண்டோம்.

இதுதானாக முன்வந்து வழங்கப்பட்டதே தவிர, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்டது இல்லை. இசைக் கோா்வையின் உரிமை, பதிப்புரிமை மீறல் தொடா்பான குற்றச்சாட்டுகள் தில்லி உயா்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. இசைக்கோா்வையை இயற்றியது யாா், அதன் உண்மைத்தன்மை மற்றும் காப்புரிமை மீறல் குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. இதற்கு நீதிமன்றத்தில் சட்டப்படி தீா்வு காணப்படும் என்று கூறியுள்ளாா் ஏ.ஆா்.ரஹ்மான்.