/

அம்மாவாக நடித்தால் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என்பதெல்லாம் அந்தக் காலம்!

தமிழில் நடிகைகளுக்குத் திருமணமாகி விட்டால் ஹீரோயினாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தெலுங்கிலும் அப்படித்தான் என்று நினைத்தால் இல்லையென்று நிரூபித்திருக்கிறார் அகான்ஷா சிங்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:20 pm

சரோஜினி

தமிழில் நடிகைகளுக்குத் திருமணமாகி விட்டால் ஹீரோயினாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தெலுங்கிலும் அப்படித்தான் என்று நினைத்தால் இல்லையென்று நிரூபித்திருக்கிறார் அகான்ஷா சிங். யாரோ வட இந்திய நடிகை என்று நினைத்து விடாதீர்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை தினமும் மாலையானால் நம் வீட்டு வரவேற்பறை வந்து குசலம் விசாரித்து விட்டுச் சென்றவர் தான் இந்தப் பெண். அட... அது யாரடா? அது? என்றால் அவர் தான் அகான்ஷா சிங்! மூன்று வருடங்களுக்கு முன்பு பாலிமர் சேனலில் ஒளிபரப்பான சில கலக்கல் டப்பிங் மெகா தொடர்களில் ஒன்றான  ‘நெஞ்சம் பேசுதே’ தொடரின் நாயகி.

Story image

இவருக்கும் பாலிவுட் தியேட்டர் ஆர்டிஸ்ட் கம் நடிகருமான குணால் செயினுக்கும் 2013 ஆம் ஆண்டில் திருமணமாகி விட்டது. அதே சமயத்தில் தான் அகான்ஷா ‘நெஞ்சம் பேசுதே’ தொடரில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக அறிமுகமானார். அந்தத் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மா மாத்திரமல்ல, திருமண வயதை அடைந்த மகளுக்கும் அம்மாவாக அகான்ஷா நடித்திருந்தார்.

Story image

தன்னை விட மிக இளையவர்களான இளம் நடிகர், நடிகைகளுக்குக் கூட பிற நடிகர், நடிகைகள் அம்மா, அப்பா, அத்தை மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருக்கையில் அகான்ஷாவை எது அத்தனை தைரியமாக நடுத்தர வயதுப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கத் தூண்டியது என்றால் தியேட்டர் நாடகத்தில் அவருக்கிருந்த 10 ஆண்டு நீண்ட அனுபவம் தான். அகான்ஷா மட்டுமல்ல அவரது கணவர் குணால் செயின், அகான்ஷாவின் பெற்றோர் என அனைவருமே இந்தத் துறையில் இருப்பவர்கள் என்பதால் இவருக்கும் படு இயல்பாகவே எதையெல்லாம் மக்கள் ரசிக்கக் கூடும் என்ற தெளிவு இருக்கிறது.

Story image

அந்தத் தெளிவு தான் இத்தனைக்குப் பிறகும் சீரியல் நடிகை என முத்திரை குத்தப்பட்டு கிளிஷேவாக அதே டைப் கதாபாத்திரங்களைச் செய்ய அனுமதிக்காமல் சமீபத்தில் வெளியான ‘மல்லி ராவா’ தெலுங்குத் திரைப்படத்தின் நாயகி ஆக்கியுள்ளது. டோலிவுட்டில் சுமந்த்தும் பெயர் சொல்லிக் கொள்ளும்படியான இளம் நடிகர்களுள் ஒருவர். மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவின் மகள் வயிற்றுப் பேரனான சுமந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘மல்லி ராவா’ திரைப்படத்தில் ஹீரோவின் பால்யத் தோழி கம் காதலி வேடம் அகான்ஷாவுக்கு. படம் கடந்த வெள்ளியன்று தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வசூல் ரீதியாக நல்ல கலெக்‌ஷன் கண்டுள்ள இப்படம் அதன் அறிமுக இயக்குனரான கெளதம் தின்னனூரிக்கும், ஹீரோ சுமந்துக்கும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

Story image

படத்தைப் பார்த்து விட்டு டோலிவுட்டின் பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்குனரையும், ஹீரோ சுமந்தையும் வெகுவாகப் பாராட்டித் தள்ளியுள்ளார். ‘மல்லி ராவா’ பால்ய ஸ்னேகிதர்கள் இருவருக்குள் நிகழும் அழகான காதலைச் சொல்லும் படம். வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை ஈட்டியுள்ளது. சில காலங்கள் படங்களில் தலைகாட்டாமல் இருந்த சுமந்துக்கு இந்த திரைப்படம் நிச்சயம் மிகச் சிறந்த ஓபனிங்காக அமையும். என்றும் அவர் மனதாரப் பாராட்டினாராம்.

ராகவேந்திர ராவ் மட்டுமல்ல, பாகுபலி புகழ் ராணா டகுபதியும் கூட இத்திரைப்படத்தில் அவர்கள் இருவரின் நடிப்பும், கதையும் அருமை எனத் தனது ட்விட்டர் பக்கத்த்தில் சிலாகித்துப் பாராட்டியுள்ளார்.

Story image

அஜ்டிஅசிதிஅஷி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.