ஓவியர் பெனிட்டா, தனது நண்பர் வீட்டில் பார்த்த "Handmade in india " என்ற புத்தகம் பற்றிய தகவலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'வாங்கிய பொருள்' எனும் தலைப்பில் பகிர்ந்திருந்தார்.
தமிழ்நாட்டில் சிலைக்கு சுவாமி மலை பிரசித்தி, கோரைப்பாய்களுக்குப் பத்தமடை பிரசித்தி, சிலைகளுக்கு மாமல்லபுரம் பிரசித்தி என்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும்... அப்படி இந்தியா முழுதும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை, அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள், அவை எங்கெங்கே கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள்.
புத்தகத்தின் விலை ரூ 3,170.
அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகு தான் தன்னால் அடுத்த வேலையைப் பார்க்க முடிந்ததென்று பெனிட்டா கூறி இருந்தார், அவர் கூறி இருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கும் கூட அந்தப் புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால் 3,170 ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்குவதா? அதில் மேலும் 10, 15 புத்தகங்கள் வாங்கி விடலாமே என்றெல்லாம் யோசித்து விட்டுப் பிறகு அதைப்பற்றி மறந்து விட்டேன். ஏனென்றால், வருடத்துக்கு ஒருமுறை வரும் புத்தகக் கண்காட்சிக்காக நான் ஒதுக்கும் தொகையே 3000க்குள் தான். பிறகு எதற்கு இந்த வெட்டி ஆர்வம் என விட்டு விட்டேன். இன்று தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல், லைப்ரரி பிரிவில் புத்தக விமர்சனத்துக்காக வித்யாசமான புத்தகங்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது லட்டு போல அதே புத்தகத்தின் பிடிஎஃப் வடிவம் கண்ணில் பட்டது. ஆஹா... பழம் நழுவில் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழாத குறை.