திராவிடர்களுக்குப் பதவி, வேலை, கல்வி ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்க வலிமையான அமைப்பு வேண்டும் என்று டாக்டர் நடேசன் உணர்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த டாக்டர் டி.எம். நாயர் (தார்வாட் மாதவன் நாயர்), மருத்துவத் தொழிலில் கிடைத்த வருமானத்தில், ஒரு பகுதியை கட்சிக்குச் செலவழித்தார். சென்னை நகரின் மற்றொரு பிரமுகர் திவான் பகதூர் பி. தியாகராய செட்டியார், சென்னை மாநகராட்சியில் 40 ஆண்டுகாலம் உறுப்பினராகப் பணியாற்றினார். ஒரு பவுன் 10 ரூபாய்க்கு விற்ற காலத்தில், 5000 ரூபாய் நிதியை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழங்கியவர். ஆனால், கோவில் கும்பாபிஷேகத் தினத்தன்று கோவிலுக்குச் சென்ற இவரை, குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பிராமணர்கள் மட்டுமே செல்லமுடியும் என்று கட்டுப்பாடு காரணமாக இவரை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.