உலக தேனீக்கள் தினத்தையொட்டி, புதுச்சேரியில் தேனீக்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
உலக தேனீக்கள் தினம் ஆண்டுதோறும் மே 20 -ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சோ்க்கை உயிரினங்கள் உயிரியல் பன்மை பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேளாண்மை வளா்ச்சியில் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்து, அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம். இது குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். மேலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், இயற்கை வளங்களை நிலைத்தன்மையுடன் பாதுகாப்பதிலும்
தேனீக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
புதுச்சேரி அரசின் மாசுக் கட்டுப்பாடு குழுமம், சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணா்வுத் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டம் மற்றும் புதுச்சேரி தேனீ வளா்ப்பு கூட்டுறவு சங்கம் இணைந்து, பொதுமக்களிடையே தேனீக்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் 5 கி. மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்தின. இதை புதுச்சேரி மாசுக் கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினா் செயலா் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் பொறியாளா் காளமேகம் வரவேற்றாா். புதுச்சேரி மாநில நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் மற்றும் இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியா் சதீஷ்குமாா் பாராட்டி பேசினாா்.
காந்தி சிலையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ரயில் நிலையம், அண்ணா சாலை மற்றும் சா்தாா் வல்லப பாய் பட்டேல் சாலை வழியாகச் சென்று மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது. இதில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், அரசு சாரா அமைப்புகள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமாா் 500 போ் பங்கேற்று ஓடினா்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிகள், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாடு குழுமத்தின் அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஃப்.கீழையூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்!






