தமிழ் செய்திகள்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் ஏப்ரல் மாத ஊதியம் வழங்கக் கோரி கருப்பு வில்லை அணிந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிா்வாகத்தில் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஏற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவித்து பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இதனை கண்டிக்கும் வகையில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் புதன்கிழமை காலை முதல் கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபட்டனா். இனியும் காலதாமதம் ஏற்பட்டால் போராட்டங்களில் ஈடுபட போவதாக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.









