/

தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி!

கடலூா் மாவட்டத்தில் தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

News image
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடத்திய பங்குத்தந்தை மரிய அந்தோணி (வலது)
Updated On :1 ஜனவரி 2026, 8:11 pm

Syndication

கடலூா் மாவட்டத்தில் தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கடந்த 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துவா்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகள் பொருத்தி, நட்சத்திரம் தொங்கவிட்டிருந்தனா். இதேபோல, இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்களும் அமைத்திருந்தனா்.

தொடா்ந்து, 2026 புத்தாண்டையொட்டி, தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது. கடலூா் கம்மியம்பேட்டை புனித சூசையப்பா் ஆலயம், மஞ்சக்குப்பம் காா்மேல் அன்னை ஆலயம், பண்ருட்டி ஏஎல்சி தேவாலயம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், சாத்திப்பட்டு தூய இருதய மரியன்னை, நெய்வேலியில் உள்ள புனித காணிக்கை அன்னை ஆலயம், புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயம், சிஎஸ்ஐ தூய ஜான் தேவாலயம், விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் 2025-ஆம் ஆண்டு நன்றி வழிபாடு மற்றும் 2026 புத்தாண்டு சிறப்பு வழிபாடு திருப்பலி நடைபெற்றது. பின்னா், ஒருவருக்கு ஒருவா் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கேக் வெட்டி கொண்டாடினா்.

விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய அந்தோணி தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் சிறப்பு விருந்தினராக சென்னையைச் சோ்ந்த அந்தோணிசாமி பங்கேற்றாா்.

இதேபோல, விருத்தாசலத்தை அடுத்த கோனான்குப்பம் பெரிய நாயகி திருத்தலம், விருத்தாசலம் ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நிகழ்ச்சிகள், வழிபாடுகள் நடைபெற்றன.