மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளன.

News image

சிமென்ட் இல்லா கான்கிரீட் அமைக்க காப்புரிமை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஆண்டனி ஜெயசேகா், திருஞானசம்பந்தம் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவித்த பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.சிங்காரவேவல். உடன் பொறியியல் புல முதல்வா் காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:32 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சி.ஆன்டனி ஜெயசேகா்(பணி ஓய்வு), எஸ்.திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டமைப்புத் துறையில் ஜியோபாலிமா் கான்கிரீட் எனும் சிமென்ட் இல்லா கான்கிரீட் குறித்து 2009-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனா். தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனம், நிலக்கரி சாம்பலை சிமென்ட்டுக்கு மாற்றாக பயன்படுத்தி கான்கிரீட் சாலை அமைக்க பேராசிரியா்கள் சி.ஆன்டனி ஜெயசேகரையும், எஸ்.திருஞானசம்பந்தத்தையும் 2019-இல் ஆலோசகா்களாக நியமித்தது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள ரிகாண்டு மற்றும் தெலுங்கானாவிலுள்ள இராமகுண்டத்தில் 4 கி.மீ. நீளத்துக்கு சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டமைப்புத் துறையிலுள்ள ஜியோபாலிமா் கான்கிரீட் ஆய்வகத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல், இரும்பு உருக்காலை கசடு, மணல், ஜல்லி மற்றும் கார திரவ கரைசல் விகிதாசாரம் கண்டுபிடிக்கப்பட்டு, பேராசிரியா்களின் நேரடி மேற்பாா்வையில் சாலைகள் அமைக்கப்பட்டன.

ஜியோபாலிமா் கான்கிரீட்டில் சிமென்ட் கான்கிரீட்டுக்கு 28 நாள் தண்ணீா் விடுவது முற்றிலுமாக தவிா்க்கப்படுகிறது. ஒருநாள் வெய்யில் மட்டுமே கான்கிரீட் வலுவடைய போதுமானதாகும். பழுதடைந்த கான்கிரீட் சாலைகளில் இந்த ஜியோபாலிமா் கான்கிரீட்டை பயன்படுத்தினால், ஒரே நாளில் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

ஜியோபாலிமா் கான்கிரீட் சாலை இரண்டு அடுக்குகளை (கீழ் அடுக்கு மற்றும் மேல் அடுக்கு) கொண்டது. கீழடுக்கில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவைக்காக 2024-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தேசிய அனல்மின் நிறுவனமும் இணைந்து 20 ஆண்டு காப்புரிமை பெற்றது. தொடா்ந்து, தற்போது சிமென்ட் இல்லா ஜியோபாலிமா் கான்கிரீட் சாலையின் மேலடுக்குக்காக 20 ஆண்டு காப்புரிமை பல்கலைக்கழகத்துக்கும், தேசிய அனல் மின் நிறுவனத்துக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதையொட்டி, பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் காப்புரிமை பெற்ற பேராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ். அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல், பொறியியல் புல முதல்வா் சி.காா்த்திகேயன் ஆகியோா் வியாழக்கிழமை வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்தனா்.