இடைத்தரகர்களின் பிடியில் ஒசூர் உழவர் சந்தை!
ஒசூர், நவ. 22: ஒசூர் உழவர் சந்தையில் விவசாயிகளின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இடைத்தரகர்களாக வியாபாரிகளும், ரௌடிகளும் காய்கறிகளின் விலையை நிர்ணயம் செய்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்


ஒசூர், நவ. 22: ஒசூர் உழவர் சந்தையில் விவசாயிகளின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இடைத்தரகர்களாக வியாபாரிகளும், ரௌடிகளும் காய்கறிகளின் விலையை நிர்ணயம் செய்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒசூரில் ஆண்டு முழுவதும் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலையைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை பயிர் செய்கின்றனர். தமிழகத்திலேயே காய்கறிகள் விற்பனையில் முதலிடத்திóல் உள்ள ஒசூர் உழவர் சந்தையில், நாள்தோறும் 100 டன் காய்கறிகளும், விடுமுறை நாள்களில் 150 டன் காய்கறிகளும் விற்பனை ஆகின்றன.
இங்குள்ள தொழிற்சாலைகளின் உணவு விடுதிகளுக்கு உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கப்படுகிறது. விடுமுறை நாள்களில் நகர மக்கள் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வீட்டில் சேமித்து வைப்பது வழக்கம்.
இந்த உழவர் சந்தைக்கு தினமும் 100-க்கும் குறைவான விவசாயிகளே அரசு பஸ்களில் இலவசமாகக் காய்கறிகளைக் கொண்டு வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விவசாய அட்டையைப் பெற்றுக் கொண்டு, பத்தலப்பள்ளி மார்க்கெட் பகுதியில் மொத்தமாகக் காய்கறிகளை வாங்கி ஒசூர் உழவர் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இங்கு விற்பனையாகும் காய்கறிகளின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்வதில்லை. விவசாயிகளின் போர்வையில் உள்ள வியாபாரிகள் மற்றும் ரெüடிகள் விலையை நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பலன் இல்லை.
இடைத்தரக்களாகச் செயல்படும் வியாபாரிகளுக்கும், இதற்கு துணைப் போகும் சில அலுவலர்களுக்கும்தான் பலன்.
ஒசூர் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ காய்கறி விலை: அடைப்புக்குறிக்குள் வியாபாரிகள் விற்பனை செய்த விலை.
பீன்ஸ்- ரூ.22 (ரூ.30),கேரட்- ரூ.20, (ரூ.25), அவரைக்காய்-ரூ.20, (ரூ.25), வெங்காயம்- ரூ.22 (ரூ.28),உருளைக்கிழங்கு-ரூ.18, (ரூ.22).
ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ பீன்ஸ் ரூ.8 என கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 3 டன் பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோவுக்கு ரூ.8 வீதம் 3 டன்னுக்கு ரூ.24 ஆயிரம் இடைத்தரகர்களுக்கு லாபம் கிட்டியுள்ளது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விற்பனையைக் கருத்தில் கொள்ளும்போது,நாள்தோறும் இடைத்தரகர்களுக்கு பல லட்சம் லாபம் ஈட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கூடுதல் விலை குறித்து வேளாண் விற்பனை அதிகாரி ராஜன் கூறியது:
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களின் வேளாண் பொறுப்பையும் கவனித்து வருகிறேன். துறையில் போதுமான அலுவலர்கள் இல்லை. கிராம நிர்வாக அதிகாரிகள் கொடுக்கும் சான்றிதழை வைத்து விவசாயிகள் அட்டை வழங்கப்படுகிறது. ஒசூர் உழவர் சந்தையை பொருத்தவரை விவசாயிகளை விட வியாபாரிகள், ரெüடிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இதுதொடர்பாக மக்கள் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...