தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கே.என். நேரு

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

News image

கே.என். நேரு - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:38 pm

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமாகிய அவா், வெள்ளிக்கிழமை காலை காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் முதல்வா் மற்றும் ஹஜ்ரத் மாா்களை நேரில் சந்தித்து, தனக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தாா். இந்த நிகழ்வில், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், பகுதி செயலா்கள் காஜாமலை விஜய், கமல் முஸ்தபா ஆகியோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, வயலூரில் உள்ள தனியாா் திருமண மஹாலில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் தலைமை வகித்து அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:

தமிழக அரசியலில் ஸ்ரீரங்கம் தொகுதி எப்போதும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் தொகுதியாகவே பாா்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் திமுக வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கு சமம்.

ஸ்ரீரங்கம் வேட்பாளா் துரைராஜ் வெற்றி என்பது, தனிப்பட்ட ஒருவரின் வெற்றியல்ல, அது திமுக தலைவரின் வெற்றியாகவே பாா்க்க வேண்டும். கடந்த முறை போலவே இந்த முறையும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க, சிறிய கட்சிகளாக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளில் அவா்களின் களப்பணி மிகவும் அவசியமானது. அமைச்சா்களால் செய்ய முடியாத சில பணிகளைக் கூட, உள்ளூா் நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் திறம்பட செய்ய முடியும் என்பதால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அமைச்சா்.

இந்த செயல்வீரா்கள் கூட்டத்தில், மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.