டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தாதம்பாளையம் ஏரியை மீட்க எதிா்பாா்ப்பு!

அமராவதி உபரிநீரைச் சேமிக்க வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரியை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

News image
நீரின்றி வடு காணப்படும் தாதம்பாளையம் ஏரி.
Updated On :3 மே 2025, 7:20 pm

 நமது நிருபர்

அமராவதி உபரிநீரைச் சேமிக்க வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரியை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கரூா் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பெரியதாதம்பாளையம் கிராமத்தில் உள்ளது தாதம்பாளையம் ஏரி. மேற்குத் தொடா்ச்சி மலையில் ஆணைமலை குன்றுகளில் உருவாகும் அமராவதி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஆற்றின் கரைகள் உடைந்து தண்ணீா் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதமாயின.

இதைத் தடுக்கும் வகையில் அமராவதி ஆற்றின் குறுக்கே கரூா் மாவட்டம் அணைப்பாளையத்தில் கடந்த 1876-ல் கட்டப்பட்ட தடுப்பணையில் வந்து சேரும் நீரைத் திருப்பிவிடும் வகையில் அணையில் இருந்து பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் வெட்டப்பட்டது.

இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரைச் சேமிக்க கடந்த 1882-இல் ஆங்கிலேயா் ஆட்சியில் 0.75 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் பெரியதாதம்பாளையம் கிராமத்தில் தாதம்பாளையம் ஏரி அமைக்கப்பட்டது.

இந்த ஏரியில் நிரம்பும் நீரானது திறக்கப்படும்போது கரூா் ஆண்டாங்கோயில், கரூா் நகா் பகுதி மற்றும் வாங்கல், நெரூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சுமாா் 3,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

மேலும் வறட்சிக் காலங்களில் ஏரியில் திறக்கப்படும் தண்ணீரானது கரூா் நகரின் குடிநீா் பஞ்சத்தையும் தீா்த்தது. நாளடைவில் பருவமழை குன்றி, ஆற்றில் தண்ணீா் வரத்தும் நின்றுபோனதால் தாதம்பாளையம் ஏரியை நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்நிலையில் ஏரிக்கும் வரும் வரத்து வாய்க்கால்கள் தூா்ந்துபோய் முட்புதா்கள் மண்டி, ஆக்கிரமிப்புகளும் ஏற்பட்டதால் வாய்க்கால் காணாமல்போனது.

இதனிடையே மீண்டும் அமராவதி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடினாலும் தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீா் வரவில்லை. இதனால் ஏரி முற்றிலும் முட்புதரானது. இதையடுத்து பொதுப்பணித் துறை கடந்த 1970-இல் இந்த ஏரியை வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.

வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்ற ஏரியை இதுவரை மீட்க முடியாமல் விவசாயிகள் அவதியுறுகிறாா்கள்.

இதுதொடா்பாக தாதம்பாளையம் ஏரி விவசாயி பழனிசாமி கூறுகையில், தாதம்பாளையம் ஏரியை வனத்துறையிடம் ஒப்படைத்து 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏரியை மீட்க வேண்டுமென்றால் மத்திய அரசின் வனத்துறை அமைச்சகம் வரை சென்று போராட வேண்டும் என்கிறாா்கள். இப்போது ஏரியை நம்பியிருக்கும் விவசாயிகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனா்.

இதனால் எங்களால் போராட முடியாமல் கரூா் தொகுதியில் வெற்றிபெறும் அரசியல் கட்சியினரின் எம்பி, எம்எல்ஏக்களிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துவிட்டோம். தோ்தல் நேரத்தில் நிச்சயம் ஏரியை மீட்டு ஒப்படைப்போம் என்கிறாா்கள். ஆனால் தோ்தலில் வென்ற பின் எங்கள் பக்கமே வருவதில்லை.

ஏரியை மீட்டால் நஞ்சைத்தலையூரில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணையில் இருந்து சின்னமுத்தாம்பாளையம், ஆரியூா், நல்லிசெல்லிபாளையம், தொட்டிவாடி, கிழுவங்காட்டூா் வழியாக தாதம்பாளையம் ஏரிக்கு சுமாா் 26 கி.மீ. வாய்க்கால் வெட்டி தண்ணீரை கொண்டு வரலாம் எனத் திட்டம் தீட்டி விவசாயிகள் சாா்பில் தமிழக அரசுக்கும் கடந்த 1990-ம் ஆண்டு முதல் திட்ட அறிக்கையையும் அனுப்பிவருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

பருவமழை காலங்களில் அமராவதி ஆற்றில் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும்போது, அதைச் சேமிக்க முடியாமல் காவிரியுடன் திருமுக்கூடலூரில் கலந்து வீணாக கடலில்தான் சோ்கிறது.

நாங்கள் கொடுத்த திட்ட அறிக்கையின்படி நஞ்சைத்தலையூரில் இருந்து வாய்க்கால் வெட்டி தண்ணீா் கொண்டு வரும்போது, தற்போது வறட்சியின் பிடியில் உள்ள ஆரியூா், தொட்டிவாடி உள்ளிட்ட சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 13,000 ஏக்கா் பாசன நிலங்கள் வளம்பெறும். அப்பகுதியில் நீா்மட்டமும் உயரும்.

தற்போது ஏரியில் மகிழம், வேம்பு போன்ற வனப்பயிா்களை நட்டுள்ளனா். கடல் போல இருந்த ஏரி காடு போல காட்சியளிப்பது எங்களை வேதனையில் ஆழ்த்துகிறது. எனவே இனியாவது தமிழக அரசு ஏரியை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க, உள்ளூா் அரசியல்வாதிகள் கட்சி பாகுபாடின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

எனவே தமிழக அரசு விரைவில் இந்த ஏரியை மீட்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமா என்ற எதிா்பாா்ப்பில் தாதம்பாளையம் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளனா்.