/

சாலை விபத்தில் சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு

News image
ஆதிராஜ் கிருஷ்ணன்.
Updated On :11 ஜனவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி விமான நிலைய போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ஆதிராஜ் கிருஷ்ணன் (51). இவா் ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு சென்னை புறவழிச்சாலை வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேன் ஒன்று கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றுகொண்டிருந்தன.

இந்நிலையில், சஞ்சீவி நகா் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆதிராஜ் கிருஷ்ணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.