மஞ்சள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு
பெரம்பலூர், ஜன. 20: நிகழாண்டு மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதைச் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முட்டா, கஸ்தூரி, விரலி, கரி, நாக, காஞ்சிரத்தின், குரங்கு


பெரம்பலூர், ஜன. 20: நிகழாண்டு மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதைச் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முட்டா, கஸ்தூரி, விரலி, கரி, நாக, காஞ்சிரத்தின், குரங்கு, காட்டு, பலா, மர, ஆலப்புழா (தாவரவியல் பெயர் குர்குமா லுங்கா) உள்ளிட்ட ரகங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.
இவற்றில் முதல் ரகமாகக் கருதப்படும் ஆலப்புழை, தமிழகத்தில் வெப்ப மண்டலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றவை. ஆண்டுக்கு சராசரியாக 1,500 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் இடங்களில் மஞ்சள் மிகவும் செழிப்பாக வளறும்.
ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் மஞ்சளுக்கு, நிகழாண்டு தொடக்கம் முதலே விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டத்தில் 1740 ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செயயப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை நேரடியாக மண்டிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்தனர். ஆனால், தற்போது இடைத் தரகர்கள், ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை செய்யப்படுவதால் மஞ்சள் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
கடந்த 2008-ல் ஒரு குவிண்டால் மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 4 ஆயிரத்து 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2009-ல் மஞ்சள் சாகுபடி குறைந்ததால், குவிண்டால் ரூ. 11 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அப்போது பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். 2010 தொடக்கத்தில் மஞ்சள் வரத்து குறைந்ததால், குவிண்டால் ரூ. 16 ஆயிரத்து 700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு இறுதியில் மஞ்சள் அறுவடை தொடங்கியதும், புதிய மஞ்சள் வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால், மஞ்சள் விலை படிப்படியாகக் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து மஞ்சள் விலை உயர்ந்ததால், நிகழாண்டு அதிகப் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது ஒரு குவிண்டால் மஞ்சளை ரூ. 3400-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மேலும், மஞ்சள் பயிரில் ஏற்பட்ட நோய்த் தாக்குதலால், நிகழாண்டு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மஞ்சள் சாகுபடி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியது:
கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் விலை படிப்படியாக உயர்ந்தது. மேலும், 2010-ல் விளைச்சலும் இரு மடங்காக அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், சாகுபடி செய்ததற்கு செலவிட்ட தொகையைக்கூட திரும்பப் பெற முடியாமல் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால், மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள், கரும்பு, கிழங்கு, நெல், வாழை உள்ளிட்ட மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறும் நிலை ஏற்படும்.
எனவே, மஞ்சள் சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 15 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...