/

அடிப்படை வசதிகள் இன்றி திருவெறும்பூர் ரயில் நிலையம்

திருவெறும்பூர், செப். 2: திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் தொழில்சாலைகள் அதிகம் உள்ள பகுதி திர

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:49 pm

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், செப். 2: திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 திருச்சி மாவட்டத்தில் தொழில்சாலைகள் அதிகம் உள்ள பகுதி திருவெறும்பூர். இந்தப் பகுதியில் பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனம், துப்பாக்கி தொழில்சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தனியார் தொழில்சாலைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன.

 திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, திருநெல்வேலி, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, மைசூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

 ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே இருபுறமும் இறைச்சிக் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மிஞ்சும் இறைச்சிக் கழிவுகளை தண்டவாளம் அருகே கொட்டுகின்றனர்.

 மேலும், ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை. எப்போதும், கழிப்பறைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.

 நான்கு நடைமேடைகளைக் கொண்ட இந்த ரயில் நிலையம், தற்போது இரண்டு நடைமேடைகளை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. பயன்படுத்தப்படாத நடைமேடைகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

 இந்த ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறை கிடையாது. அதேபோல, போதிய வாகன நிறுத்தங்கள் இல்லாததால், வாகனங்களை திறந்த வெளியிலேயே நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.

 4-வது நடைமேடைக்குச் செல்ல நடை மேம்பாலம் இல்லாததால், ரயில் பயணிகள் தண்டவாளத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது, விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து பொதுமக்கள், ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

 இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியது:

 திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் என்றால், முதலில் கழிவு நீரையும், அங்குள்ள இறைச்சிக் கடைகளையும் கடந்துதான் வர வேண்டும்.

 இந்த ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்டவற்றை போதிய அளவில் பராமரிக்காததால், ரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும், 4-வது நடைமேடைக்குச் செல்ல நடை மேம்பாலம் இல்லாததால், தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால், பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

 இதேபோல, 1, 2-வது நடைமேடைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், அங்கு முள் செடிகள் முளைத்துள்ளன.

 மேலும், இந்த ரயில் நிலையத்தில் புத்தக மற்றும் செய்தித்தாள் கடைகள், கேண்டீன் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும்.

 எனவே, திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தர ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் ரயில் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.