தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பொருள்கள் ஏலம் மூலம் 4 மாதங்களில் ரூ. 26.5 லட்சம் வருவாய்

திருச்சி, ஜூன் 21: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சுவாமி, தாயாருக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள், சேலைகள் உள்ளிட்ட பொருள்களை ஏலம் விட்டதன் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டு

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:30 pm

கு. வைத்திலிங்கம்

திருச்சி, ஜூன் 21: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சுவாமி, தாயாருக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள், சேலைகள் உள்ளிட்ட பொருள்களை ஏலம் விட்டதன் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ. 26.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    108 வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்குவது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில். ஸ்ரீரங்கம் கோயிலின் கட்டுப்பாட்டில் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாக்ஷப் பெருமாள் திருக்கோயில், அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன.

   பன்னிரு ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் திருவிழாக்கள் இல்லாத மாதங்களே இல்லை என்று கூறலாம்.

சுமார் 21 நாள்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, சித்திரை, பங்குனித் தேரோட்டங்கள் பிரசித்தி பெற்றவையாகும்.

   வழக்கமான நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், திருவிழாக் காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அரங்கநாதரையும், அரங்கநாயகி தாயாரையும் தரிசித்து செல்கின்றனர்.

    இவ்வாறு திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் அருள்மிகு அரங்கநாதர் சுவாமிக்கும், அரங்கநாயகி தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், புடவைகளை அணிவித்து சுவாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இதுபோல திருவிழாக் காலங்களில் தங்கள் நிலங்களில் விளைந்த பொருள்களையும் கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் செலுத்தும் காணிக்கைப் பொருள்களை திருக்கோயில் நிர்வாகம் அவ்வப்போது ஏலம்விட்டு வருகிறது. கோடைகாலம் என்பதால் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு,  மே, ஜூன் மாதங்களில் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மற்ற மாதங்களில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

      பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வேட்டிகள், துண்டுகள், தாயாருக்கு அணிவிக்கப்படும் சேலைகள், கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள், பலாப் பழம் உள்ளிட்ட பழவகைகள், கடலை, மிளகாய் உள்ளிட்ட பொருள்கள், கோயில் வளாகத்தில் உள்ள விவசாய நிலத்தில் விளைந்த மாங்காய்களும் ஏலம் விடப்படுகின்றன.

    திருக்கோயில் சார்பில் ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தபட்ச விலை இவ்வளவு என்று நிர்ணயித்து, அதன்படி ஏலம் விடப்படுகிறது. கோயில் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரி, ஏலம் விடுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர் முன்னிலையில்தான் பொருள்களின் ஏலம் விடப்படுகிறது.

     ஏலத்துக்கு நல்ல வரவேற்பு:   ஸ்ரீரங்கம் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில் பக்தர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முதலில் ஏலம் நடைபெறுவதைப் பார்க்கின்றனர். பின்னர், ஏலத்தில் தாங்களும் பங்கேற்று, சுவாமி, தாயாருக்கு அணிவித்த வஸ்திரங்கள், சேலைகள் உள்ளிட்டவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

  சுவாமி, தாயாருக்கு அணிவித்த வஸ்திரங்கள், சேலைகள், கோயிலுக்கு காணிக்கையாக வந்த பொருள்களை வாங்கிச் செல்வதே எங்களுக்கு கிடைத்த சிறப்பு என்று கூறி, பெரும்பாலான பக்தர்கள் ஏலப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

   ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற ஏலத்தின் மூலம் சுமார் 26.5 லட்சம் வருவாய் கிடைத்திருக்கிறது. இந்தத் தொகை சென்ற ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. பக்தர்கள் அதிகளவில் ஏலத்தில் பங்கேற்பதால், வருவாய் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.

    ஏலம் மட்டுமல்லாது கோயிலின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாயும் சென்ற ஆண்டைக் காட்டிலும் உயர்ந்திருக்கிறது. சென்ற ஆண்டில் ஏறக்குறைய ரூ. 2.5 கோடிக்கும் அதிகமாக கிடைத்த நிலையில், நிகழாண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ. 1 கோடி வருவாய் உண்டியல் மூலம் கிடைத்திருக்கிறது.

  மாதம் குறைந்தது ரு. 20 லட்சம் உண்டியல் மூலம் கிடைத்து வருகிறது. இந்தாண்டு உண்டியல் மூலம் வருவாய் சற்றுக் கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் கோயில் இணை ஆணையர் சி. ஜயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.