டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் காலிப் பணியிடம் நிரப்பப்படுமா?

பெரம்பலூர், ஜூலை 20: பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடம் காலியக உள்ளதால், பணிகள் தாமதமாவதோடு, மாதம் சுமார் ரூ. 50 லட்சம் வருவாய் இழப்பீடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, காலியா

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:47 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், ஜூலை 20: பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடம் காலியக உள்ளதால், பணிகள் தாமதமாவதோடு, மாதம் சுமார் ரூ. 50 லட்சம் வருவாய் இழப்பீடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, காலியாக உள்ள வட்டாரப்  போக்குவரத்து ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில், ஒரு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட சுமார்  15-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

     ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது, பெரம்பலூர், அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும்  பெரம்பலூரில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகமே தலைமை இடமாகச் செயல்பட்டு வந்தது. பின்னர், திருச்சியில் இருந்து தனி மாவட்டமாக  அறிவிக்கப்பட்டவுடன்,  ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக இயங்கி வந்தது.

    இங்கு நாள் ஒன்றுக்கு லாரி, வேன், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார்,  பேருந்து உள்பட 40-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

    இதனிடையே, 2009 ஆம் ஆண்டு முதல் அரியலூர் மாவட்டத்துக்கு என தனி  அலுவலகம்  தொடங்கப்பட்டதால், தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 20-க்கும் குறைவான வாகனங்களே பதிவு செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் பணிபுரிந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் புணி ஓய்வு பெற்றதையடுத்து, போக்குவரத்து ஆய்வாளர் பணி காலியாக உள்ளது. இதனால், பெரம்பலூர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரகத்து ஆய்வாளரே பொறுப்பு அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்த அலுவலர் பெரம்பலூர் மட்டுமன்றி கரூர், ஸ்ரீரங்கம்,  அரியலூர், துறையூர் துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினார்.

    இதனால், ஒவ்வொரு அலுவலகத்துக்கும், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே  சென்று, அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்ததால், அனைத்து அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பேருந்து, லாரி, வேன், டாக்ஸி, மேக்ஸி  வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள், பயிற்சிப் பள்ளி  உரிமையாளர்கள் பாதிப்படைவதுடன், விவசாயத் துறையில் பதிவு செய்யப்பட்ட  டிராக்டர் வரியின்மைச் சான்று பெறுவது, உரிமத்தைப் புத்துப்பித்தல், வரியின்மைச் சான்று பெயர் மாற்றம், தாற்காலிக உரிமத்தைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொறுப்பு அலுவலராகப்  பணிபுரிந்த ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

    இதனால், பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  உள்ள அனைத்துப் பணிகளும் முடங்கிப் போனதோடு, நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம்  வீதம் மாதம் ரூ. 50 லட்சம் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் தனி வட்டாரப் போக்குவரத்து  அலுவலகம் செயல்பட்டும், போக்குவரத்து தொடர்பான அனைத்துப் பணிகளும்  தாமதப்பட்டுள்ளன.

  எனவே, பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காலியாக உள்ள ஆய்வாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.