புதிய குடும்ப அட்டை வழங்கலில் தொடரும் சிக்கல்
திருச்சி, அக். 26: திருச்சி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் அளிப்பவர்கள் தொடர்ந்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அரசு, தனியார் உள்ளி


திருச்சி, அக். 26: திருச்சி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் அளிப்பவர்கள் தொடர்ந்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
அரசு, தனியார் உள்ளிட்ட அத்தனை சேவைகளுக்கும் அத்தியாவசியமானதாக இப்போதுவரையும், இன்னும் சில காலங்களுக்கும் கோரப்படுவது "குடும்ப அட்டை'.
இதனாலேயே ஒவ்வொரு நியாய விலைக் கடை வாரியாக நூற்றுக்கணக்கில் உருவாகிப் போய்விட்ட போலி அட்டைகளைக் கண்டறியும், நீக்கும் பணிகளும் தொடர்ந்து வருகின்றன.
புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனுக்குடன் அச்சிட்டு வழங்க அந்தந்த மாவட்டங்களிலேயே "எல்காட்' உதவியுடன் விரைவில் அச்சிடும் பணியும் தொடங்கிவிட்டது. என்றாலும், புதிய அட்டை வழங்கும் பணியில் இருக்கும் தொய்வைச் சரி செய்யவே முடியவில்லை.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 7.26 லட்சம் குடும்ப அட்டைகள் தற்போது உள்ளன. ஆண்டுதோறும் "எல்லா வழிகளிலும்' குறைவில்லாமல் 10,000 விண்ணப்பங்கள் புதிய அட்டை கோரி வந்துசேருகின்றன.
இவற்றில் சரிபாதி விண்ணப்பங்களுக்குக்கூட முறையாக புதிய அட்டைகள் அச்சிட்டு வழங்குவதில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டு.
குறிப்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த 50-க்கும் மேற்பட்ட- வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட வழங்கல் அலுவலரைச் சந்திக்கச் சென்றனர்.
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அளித்திருந்த விண்ணப்பங்களின் நகல்கள், அவற்றைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது போன்றவற்றையும் அந்த மக்கள் வைத்திருந்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் ஒரு சிறிய அறையில் புதிய குடும்ப அட்டைகளை விநியோகம் செய்வதாக அவர்களுக்கு தகவல். பிற்பகல் ஒரு மணி வரைக்கும் அந்த அறை திறக்கப்படவே இல்லை. அலுவலகத்தில் பலரிடம் கேட்டும் எந்தப் பயனும் இல்லை.
தொடர்ந்து காத்திருந்தபோது, பிற்பகல் 1.20 மணிக்கு இருவர் அந்த அறையைத் திறந்தனர். தங்களிடமிருந்த பைகளில் இருந்து இரு பெரிய கட்டுகளில் புதிய குடும்ப அட்டைகளை எடுத்து மேஜையில் பரப்பி வைத்துக் கொண்டு, "யாரிடமாவது அஞ்சலட்டை உள்ளதா?' எனக் கேட்டனர்.
ஒருவரிடமும் அஞ்சலட்டை இல்லை. ஒவ்வொருவராக விசாரித்து, 2008-க்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் "மறுபடியும்' விண்ணப்பிக்கவும், 2009-ல் விண்ணப்பித்தவர்களிடம் "எதாவது ஒரு இணைப்பு' இணைத்திருக்கவில்லை என்ற காரணமும் கூறப்பட்டது.
மொத்தத்தில் வந்திருந்த ஒருவருக்குக்கூட புதிய அட்டை அளிக்கப்படவே இல்லை. பாதிக்கப்பட்ட சிலர் கூறியது;
பீமநகர் பக்ருதீன், பூபாளன்:2007-ல் விண்ணப்பம் செய்திருந்தேன். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டுக்கு வந்து விசாரித்த சிலர், "நாளை (திங்கள்கிழமை) மாவட்ட வழங்கல் அலுவலகம் வந்து புதிய அட்டையை வாங்கிச் செல்லுங்கள்' எனக் கூறிச் சென்றனர். இதுபோல, பல முறை வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு அலைந்து வருகிறோம்.
தென்னூர் அண்ணாநகர்
ஜே. நேவிசன்:
நான்காவது முறையாக 2007-ல் ஒரு விண்ணப்பம் செய்திருந்தோம். ஒவ்வொரு முறையும் அலைச்சல் மட்டுமே மிச்சமாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணம் கூறுகின்றனர்.
உறையூர் பாண்டமங்கலம் கவிதா:
திருமணமானபோது புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். இப்போது குழந்தையும் பிறந்து விட்டது. இப்போது அந்தக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...