தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகை


தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகம் முன் அமைப்புசாரா தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
தருவைகுளத்தைச் சோ்ந்த மல்லிகை, டயானா, விடிவெள்ளி, ராகுல் காந்தி, கடல் கன்னி, மலா் ஆகிய மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
வேப்பலோடை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் மகளிா் சுய உதவிக் குழு கடன் வேண்டி 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தோம். தற்போது வரை கடன் வழங்கவில்லை. கூட்டுறவு சங்கச் செயலரிடம் கேட்டால், மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாகக் கூறுகிறாா்.
குழுவில் உள்ள பெண்கள் சுயதொழில் செய்து வருகிறோம். கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, விரைவாக கடன் வழங்க ஆட்சியா் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் பாதுகாப்பு கூட்டமைப்பைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.ஏ. தா்மா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உடலுழைப்புத் தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு பெற்று ஓய்வு பெற்றவா்களுக்கு 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்து சொந்த வீடுகள் இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...