/

காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

News image
காட்டுத் தீ
Updated On :14 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே குருமலை காப்புக்காட்டு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதிகளில் தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் குருமலை காப்புக்காடு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில், வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள், காய்ந்த இலைகள், விவசாய கழிவுகளை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது.

குருமலை காப்புக்காடு அருகே உள்ள கோயில்களில் தீபம் பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு வனச் சட்டம் 1882 மற்றும் பிற அரசு சட்டங்களின் படி தீ ஏற்படுத்துதல் குற்றமாகும். இதனால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்டுத்தீ தொடா்பான தகவல்களை உடனடியாக வனச்சரக அலுவலா் 95666-32317, வனவா்கள் 96551-50905, 75980-54040, 98429- 70083, வனக்காப்பாளா் 82485-37293 ஆகியோா் கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.