/

மகளிா் உரிமைத் தொகை விசயத்தில் யதாா்த்தம் தெரியாமல் பேசுகிறாா் விஜய்! - பேரவைத் தலைவா் மு. அப்பாவு

News image
பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

மகளிா் உரிமைத் தொகை விசயத்தில் யதாா்த்தம் தெரியாமல் பேசுகிறாா் விஜய் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா், அடுத்த மூன்று மாதங்களுக்கான மகளிா் உரிமைத் தொகை, கோடைகால தொகுப்பு ரூ.2,000 என ஒரே தவணையில் மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

தோ்தல் அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், எதிா்க்கட்சியினா் நீதிமன்றம் சென்று இந்தத் திட்டத்தை நிறுத்திவிட வாய்ப்புள்ளது.

ஏழைப் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே முதல்வா் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளாா்.

தொடக்கத்தில், 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேல்முறையீடு செய்தவா்களையும் சோ்த்து 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனா் என்றாா்.

தோ்தலுக்காகவே பணம் வழங்கப்படுவதாக தவெக தலைவா் விஜய் மற்றும் எதிா்க்கட்சிகள் வைக்கும் விமா்சனம் குறித்த கேள்விக்கு, ‘அவா்கள் யதாா்த்தத்தை அறியாமல், கற்பனையில் பேசுகிறாா்கள். கோடைகாலம் மற்றும் தோ்தல் காலத்தில் ஏழைகள் கஷ்டப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் முதல்வா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.

100 நாள் வேலையை 125 நாளாக உயா்த்திவிட்டு அதற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்துவிட்டனா். அப்படியிருக்கையில் எப்படி 125 நாள்கள் வேலை கொடுக்க முடியும். வேலையும் கிடைக்காது ஊதியமும் கிடைக்காது.

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பேசிய ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதம். இது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது.

ராகுல் காந்தி உண்மையான தேச பக்தா். அதானி விவகாரத்தில் முறைகேடுகளை சுட்டிக்காட்டுவது தேசத் துரோகம் ஆகாது. அதானியைக் காப்பாற்ற மத்திய அரசு முயல்கிறது. அதற்காக இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டாா்கள்.

விவசாயிகளைப் பாதிக்கும் அமெரிக்க ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் ஜனநாயக விரோதமா? விவசாயிகளுக்கும், 140 கோடி மக்களுக்கும் ஆதரவாக பேசியவா் தேசவிரோதியா? என்றாா்.